இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டலில் தரம்பெற்ற புதிய அதிபர்களின் பல போராட்டங்களிற்குப் பின்னர் - மத்தியகல்வியமைச்சின் அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய – நேர்மையாக நடைபெறவிருந்த வடமாகாண புதிய தரம்பெற்ற அதிபர் நியமனத்தை தனது வரட்டு செயற்பாடுகளால் - தகுதியற்ற கடமைநிறைவேற்று அதிபர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க மேற்கொண்டுவரும் வடமாகாண கல்வியமைச்சரின் குள்ளத்தனமான செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் - இன்று (22.12.2016) வியாழக்கிழமை – கடமைநிறைவேற்று அதிபர்களை – வடமாகாண சபை அமர்வில் கல்வி விவாதம் நடைபெறமுன்பு ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டி – அவர்கள் போராட்டம் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க முனைந்தமை – தனது அரசியல் சுயநலத்துக்காக வடமாகாணக் கல்வியை தரம்தாழ்த்தச் செய்யும் மோசமான செயற்பாடாகும்.
கடமைநிறைவேற்று அதிபர்கள் - முறையாக அதிபரொருவர் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை செயற்படுத்தப்படும் தற்காலிக ஏற்பாடாகும். இது தொடர்பான மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபங்களும் உள்ளன. பரீட்சையில் தோற்றிய கடமைநிறைவேற்று அதிபர்கள் போட்டிப்பரீட்சையில் சித்தியடையாமல் – மீண்டும் தமது தகுதியற்ற நிலையில் அதிபர்களாக செயற்பட முனைவதை வடமாகாணக் கல்வியமைச்சர் ஊக்குவிப்பது மிகமோசமான செயற்பாடாகும். அதேவேளை –முறையாக தெரிவு செய்யப்படாமல் அதிகாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் செல்வாக்கால் முறையற்ற விதமாக தெரிவுசெய்யப்பட்ட கடமைநிறைவேற்று அதிபர்களைக் காப்பாற்றுவதற்காக முனையும் - வடமாகாண கல்வி தொடர்பாக – சற்றும் அக்கறையற்ற வடமாகாண கல்வியமைச்சரின் செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தரம்பெற்ற அதிபர்களுக்கு அவர்களுக்குரிய தகுதியான பாடசாலை வழங்கப்படவேண்டும். வடமாகாண முதலமைச்சர் தரம்பெற்ற அதிபர்களின் நியமனங்கள் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கிணங்கவும் - உத்தரவுக்கமையவும் புதிய அதிபர் நியமனங்கள் நடைபெறவேண்டும். இதனை வடமாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்தவேண்டும். இல்லையேல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் தரம் பெற்ற அதிபர்களை ஒன்றிணைத்து பாரிய செயற்பாட்டை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்