Monday, March 18, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களின் முக்கிய விடயங்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மனிதத்துவத்துக்கு  ஒவ்வாத குற்றங்கள்  தொடர்பாக – பக்கச்சார்பற்ற விசாரணைகளை சர்வதேசம் மேற்கொண்டு பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை வலியுறுத்தி -  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் - நீதி கோரி நாளை 19.03.2019 செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பேரணி  மற்றும் போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
நாளை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு lஅனைவரும் மனமுவந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
கடந்த இரண்டு வருடங்களாக – தமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்கு – நீதி வேண்டிய போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும். 
இத்தகைய தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாக – சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.