Monday, September 30, 2019

அதிபர், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக்க இணக்கம்; நாளை அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் விளைவாக - அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உருவாக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் - அமைச்சர்களான ரவூப்ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ டீ சில்வா, ஏரான் விக்கிரமரத்ன, அசோக அபேசிங்க ஆகியோருடன் நிதியமைச்சின் செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர் உட்பட உயர்மட்ட குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் - ஆசிரியர் அதிபர் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் - பொது அரச சேவையிலிருந்து வெளியே எடுத்து - அதிபர், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக்கவேண்டும் என இணக்கம் காணப்பட்டது.
அத்துடன்- 
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு உள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உபகுழு, அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. 
நாளை செவ்வாய்க்கிழமை இணைந்த சேவை <Closed Service > யாக்குதல் மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான ஆணைக்குழு நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த அனைத்து அமைச்சரவை உபகுழு அமைச்சர்களினதும் கையொப்பத்துடனான உறுதிமொழியும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Thursday, September 26, 2019

இன்று 27ம் திகதியும் அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம் தொடரும்

இன்று 27ம் திகதியும் அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம் தொடரும்.ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு பொருத்தமான எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
இதனால் - தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இன்றும் திட்டமிட்டவாறு அதிபர் ஆசிரியர்களின் சுகவீன லீவு போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை 27ம் திகதியும் போராட்டம் தொடரும்; ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு பொருத்தமான எவரும் சமூகமளிக்கவில்லை!


இன்று 26 ஆம் திகதி - கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக திரண்ட பல்லாயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் - லோட்டஸ் வீதியில் பேரணியாக வந்தபோது - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் - பொலிஸாரின் நீர்பாய்ச்சும் வாகனம் சகிதம் கலகமடக்கும் பொலிஸாரால் பேரணி இடைமறிக்கப்பட்டது.

பின்னர் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் உள்ளிட்ட ஐவர் ஜனாதிபதி செயலகத்துக்கு பேச்சுவார்த்தையென அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் - ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பாக பதில் வழங்கக்கூடிய எவரும் காணப்படவில்லை. இதனால் பதிலளிக்கக்கூடியவருடனேயே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பானவர் எவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதிருந்த நிலையில் -அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் - நாளை 27 ஆம் திகதியும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தவாறே தொடர்வர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

சில பாடசாலை அதிபர்களுக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் - அதனால் - ஆசிரியர்களை பாடசாலை வருமாறு அதிபர்கள் ஒரு சிலர் அழைப்பதாகவும் தகவல்கள் எமக்கு கிடைக்கின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் பயப்படதேவையில்லை. இத்தகைய அச்சுறுத்தல் அனைத்தையும் - ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு - இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பெடுக்கும் என மீண்டும் தெரிவிக்கின்றோம்.

27 ஆம் திகதி நாளையும் பணியை புறக்கணித்து - போராட்டத்தை இன்றுபோல் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Wednesday, September 25, 2019

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் பல்லாயிரமாக திரண்டனர் அதிபர், ஆசிரியர்கள்!






ஆறு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது ஆசிரியர் தொழிற்சங்கங்கள்  இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

சம்பளம் முரண்பாடு , சம்பள உயர்வு உட்பட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்  ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிபர்களிதும் ஆசிரியர்களினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதாக கல்வி அமைச்சு பலமுறை எமக்கு உறுதி மொழி வழங்கிய போதிலும் அது நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

நாம் 26 ஆம் திகதி இன்று ஆரம்பித்துள்ள சுகவீன லீவு போராட்டத்திலும் - பேரணிகளிலும் - அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சம் இல்லாமல் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று காலை 11 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னர் சகல ஆசிரியர் தொழிற் சங்கங்களும் இணைந்து மாபெரும் ஆர்பாட்மொன்றை நடத்தினோம். இலங்கையின் சகல மாவட்டங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர் என்றும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, September 24, 2019

26,27 திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்; வதந்திகளை நம்பவேண்டாம்!

26,27 ஆம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்  திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை-

26,27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அதிபர்கள் ஆசிரியர்களின் சுகவீன லீவு  போரட்டத்திற்கு வடமாகாண புதிய அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிலர் 'நடைபெறாது' என பொய்யான செய்திகளை பரப்பவும் - போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்படவும் முயல்வதாக தகவல் கிடைத்துள்ளன. 

குறித்த சங்கமொன்றை - போராட்டத்தில் இணையுமாறு எமது சங்க உறுப்பினர்கள் வாயிலாகவும் கோரிக்கை அவர்களுக்கு விடுத்திருந்தோம் - எவ்வித பதிலும் எமக்கு வழங்காமல் - தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்ற பொய்யான செய்திகளை கூறி வடக்கு கிழக்கில் அதிபர் ஆசிரியர்களை குழப்ப முயல்கின்றது.

இலங்கையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அதிபர், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக போராட தயாராக உள்ள நிலையில் - 
வடக்கு கிழக்கு கல்வியமைச்சு தவிர்ந்த எந்த வாசற்படியையும் மிதிக்காத இவர்கள் - வடக்கு கிழக்கில் கூட ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத இவர்கள் - தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ற சபையில் கூட பங்குகொள்ள தகுதியற்ற இவர்கள் - மத்திய கல்வியமைச்சுக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்கத் தகுதியுள்ளவர்களா? அவர்கள் தீர்வைப் பெற்றுத்தருவார்களா? என ஆசிரியர் அதிபர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அவ்வாறான போலித்தனமானவர்களின் செய்திகளை நம்பவேண்டாம். எனவும் 26,27 ஆம் திகதிகளில் நடபெறவுள்ள சுகயீன லீவுப் போராட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்புவிடுக்கின்றது.



Saturday, September 21, 2019

26,27 அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்!


இலங்கையில் நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் - சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விரு நாட்களும் அதிபர் ஆசிரியர்கள்    சுகயீன லீவை அறிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் - ஒன்றுபட்டு தமது உரிமைக்காக செயற்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சுகயீன லீவை - சுகயீன லீவை எடுக்கும் நடைமுறையை பின்பற்றி திணைக்கள தலைவருக்கு  கட்டாயம் அறிவித்தால் போதுமானது. 

இந்த இரண்டு தினங்களிலும் - எவ்வித காரணங்களுக்காகவும் ஆசிரியர்களோ அதிபர்களோ எந்தவொரு அதிகாரிகளின் கட்டளைக்குப் பயந்தும், பணிந்தும் பாடசாலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. 

இச் செயற்பாட்டின் முழுப்பொறுப்பையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் - 
இரண்டு நாட்களும் பாடசாலை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதற்கு - தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும். எமது நியாயமான தொழிற்சங்கப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின்  சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.

அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.

ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.

பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.

ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.

தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.

இவற்றிற்கு நாம் தீர்வுகாணவேண்டும்.
வெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் - எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இந்த வகையில் -
அனைவரும் இணைந்து போராட்டம் வெற்றிபெற பலம்சேர்க்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Wednesday, September 11, 2019

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு


வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் - இன்று 11.09.2019 புதன் கிழமை மாலை 2.15 மணியளவில் சந்திப்பொன்று நடைபெற்றது.
கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

வடமாகாணத்தின் சில பாடசாலைகளில் நிகழும் அதிபர்களின் முறையற்றசெயற்பாடுகள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கு இருவார காலத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

பாடசாலைகளில் மாணவர் அனுமதிகளுக்காக - சில அதிபர்கள் முறைகேடாக பணம் அறவிடுவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர், மாணவர் அனுமதிக்காக பணம் பெற்றுக்கொண்ட சகல அதிபர்கள் தொடர்பாகவும் தான் விபரம் கோரியுள்ளதாகவும் - தெரிவித்தார்.

பாடசாலைகளில் அபிவிருத்திச் சங்க செயற்பாடுகளில் அதிபர் சிலரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியவேளை - குறித்த ஒரு பிரபல பாடசாலையில் 4 வருடங்களுக்கு மேல் நிர்வாகம் புதிப்பிக்கப்படாமல் இயங்குவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு துரிதமாக  விசாரணை நடவடிக்கைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு ஒருமாத காலத்துள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

போர்கால சூழலில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக - நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியர்களுக்கு - நீக்கப்பட்ட காலத்துக்குரிய சம்பள ஏற்றங்களை சாதகமாக பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை சங்கத்தால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் - இவை வழங்குவதற்குரிய நடைமுறைகளில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துக்கு சாதகமான காலப்பகுதியாக கணிப்பிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் - அவ்வாறு ஓய்வூதிய சலுகை பெறாத ஆசிரியர்களளின் விபரம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாகவும், தரம் 3 அதிபர்களை பொருத்தமான  பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது..

ஆசிரியர்களின் வழங்கப்படாத சம்பள நிலுவைகளை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் - பிற விடயங்கள் தொடர்பாகவும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த ஒரு கல்வி வலயத்தில் நடந்துள்ள இரண்டு முறையற்ற நியமனங்கள் தொடர்பாக - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்பில் - ஆக்கபூர்வமான சந்திப்புகளூடாக வடமாகாண கல்வி செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.