Saturday, November 21, 2020

நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாட்டை விடுத்து, கல்வியமைச்சு அனைவருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூடிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் :

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூறிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது. 

நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்ககூடிய வகையில்  பாடசாலை தொற்று நீக்கம் செய்யப்பட்டு துப்புரவு செய்யப்படவில்லை. இன்னொரு பக்கத்தில் டெங்கு நோய் பிரச்சினையும் உள்ளது. இந்த நிலைமைகளில் பாடசாலை மாணவர்களை அபாயத்துக்குள் தள்ளும் செயற்பாடொன்றையே கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸ், போக்குவரத்து துறை ஆகியவற்றைக் கொண்டு குழு அமைக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்படியான குழுக்களை உருவாக்க முடியுமா? 

பாடசாலைகள் நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஆரம்பித்தால், டிசெம்பர் 23 ம் திகதி விடுமுறை கொடுக்கிறார்கள். இக்காலப்பகுதிக்குள் நான்கு வாரங்களே உள்ளன. ஆயினும், தற்போது ஒரு வகுப்பறையில் 15 மாணவர்களையே வைத்திருக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒரு தரத்தில், வகுப்பில் இந்தவாரம் 15 மாணவர்களையும், அடுத்தவாரம் 15 மாணவர்களையும் கொண்டே வகுப்புக்கள் நடத்தப்படவேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அப்படியானால், இரண்டு வாரத்துக்குரிய கல்வி நடவடிக்கையே நடைபெறப்போகின்றது. இவைகள் அனைத்தும் திட்டமில்லாமல் செய்யப்படும் செயற்பாடாகும். 

கொவிட் 19 சமூகத் தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில், திட்டமில்லாத வகையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

எனவே, பாடசாலைகள் ஆரம்பிப்பதாக இருந்தால், பாடசாலைகள் அனைத்தும் பூரண தொற்று நீக்கம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக தரம் 11,12,13 வகுப்புக்களை சமூக இடைவெளியுடன் முதல் வாரத்தில் ஆரம்பிக்க முடியும்.  அதன் பின்னரே மற்றைய தரங்களை ஆரம்பிக்கலாம். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. அப்படியாயின், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கல்வி அமைச்சு தெளிவுபடுத்தவில்லை. ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டுமா? இல்லையா? என்பது பற்றி கல்வியமைச்சிடம் திட்டமில்லை. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பாடவேளைகள் இல்லாமல் வீணாக போக்குவரத்து செய்யும் அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேஸ், போன்ற இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொவிட் - 19 தொற்று மிகமோசமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் கல்வியமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும். 

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பிப்பதாகக் கல்வியமைச்சு கூறியுள்ளதைத் தவிர, பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக எந்தவிதமான திட்டமும் அவர்களிடம் இல்லாமல் ஆரம்பிப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக, எல்லோருடனும் கலந்துரையாடி சரியான தீர்மானமொன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும். எமக்குத் தெரிந்த அளவில், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசனைகள் பெறாமலேயே கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. 

பிள்ளைகளுடன் ஆசிரியர்கள் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பாடசாலை ஆரம்பித்தால், ஆசிரியர்கள் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் உள்ளோம்.  அதற்கு ஆசிரியர்களும் தயாராகவே உள்ளனர். ஆனால் பாடசாலைகள் சரியான திட்டத்துடன் முறையாக ஆரம்பிக்கப்படவேண்டும்.  கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், ஆசிரியர்களை அலுவலகங்களுக்குள் உள் நுழைய விடாது  பாதுகாப்பாக இருந்து வருகின்ற நிலையில், தொற்று நீக்கங்களும், சமூக இடைவெளிகளைப் பேணக்கூடிய திட்டங்களும் பாடசாலைகளில் உருவாக்கப்படாமல் ஆரம்பிப்பது, நாட்டுமக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும். எனவே, உடனடியாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானம் ஒன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றார்.


Saturday, November 14, 2020

யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையை புறக்கணித்துள்ளோம்: வடமாகாண கல்வியமைச்சு பாரிய விளைவுகளை சந்திக்கும்! - ஜோசப் ஸ்ராலின் -

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நிவர்த்திசெய்யப்படாத, பக்கச்சார்பான இடமாற்றங்கள் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையில் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. 

கடந்த வருட இடமாற்றச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படாமல், ஒரு சில தனிப்பட்டவர்களின் தலையீடு காரணமாக தொடர்ந்தும் பக்கச்சார்பாகவே இடமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடமாற்றச்சபை கூடுவது என்னும் போர்வையில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. 

இதன்; அடிப்படையிலேயே, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த இடமாற்றச் சபையைப் புறக்கணித்துள்ளது. ஆயினும், நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றி இடமாற்றச்சபை நடைபெற்றிருந்தது. இதன்மூலம் -; ‘முறைகேடுகளை தொடர்ச்சியாக ஆதரித்துவருகின்றோம்’ என்ற விடயத்தையே குறித்த இடமாற்றசபையில் கலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  கடந்த வருட இடமாற்றச்சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, முறைகேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, யாழ்.கல்வி வலயத்தில் எடுக்கப்படும் இடமாற்றத் தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. 

வெளிமாவட்டங்களிலிருந்து கடமையாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு மட்டுமே இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைக்கும் என்பதுடன், ஏனைய அனைத்து யாழ்.மாவட்ட இடமாற்றங்களுக்கும், கடந்த இடமாற்றசபை கூட்டத்தில் எடுத்திருந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்வரை ஒத்துழைக்கப்போவதில்லை. கல்வி அதிகாரிகள், தமக்கு சார்பானவர்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளும் முறைகேடுகளுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு எம்மைத் தள்ளி வருகின்றனர். 

கடந்த வருடம் யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையில், எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்த முறைகேடுகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, மேன்முறையீட்டு சபையைக் கூட்டுவதாக, யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்திருந்தார். அவை எழுத்துமூலமாக அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆயினும், முறைகேடுகள் தீர்க்கப்படவுமில்லை, மேன்முறையீட்டு சபை கூட்டப்படவுமில்லை. 

வழங்கிய வாக்குறுதிகளுக்கமையவும், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும், இத்தகைய முறைகேடுகள் நிவர்த்திசெய்தால் மட்டுமே நேற்றைய இடமாற்றச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வோம் என யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் எம்மால் தெரிவிக்கப்பட்டுமிருந்தது. குறித்த விடயம் கல்வியமைச்சின் செயலாளராலேயே தாமதமடைகின்றது என வலயக் கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டது. வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் மீதும், செயலாளர் வலயக்கல்விப் பணிப்பாளர் மீதும் மாறி மாறி பந்தை எறிந்து தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக, கல்விக் கட்டமைப்பில் முறைகேடுகளை உருவாக்கி வருகின்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒரு நீதி என செயற்படுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. குறித்த சில முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கூட மீறும் வகையிலேயே கல்வியமைச்சின் செயலாளரும், யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரும் செயற்பட்டு வருகின்றனர். 

வடமாகாண கல்வியமைச்சின் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்குமாறு தொடர்ச்சியாக நாம் வலியுறுத்திவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் இந்த முறைகேடுகளை நிவர்த்திசெய்ய எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

இந்த முறைகேடுகள் தீர்க்கப்படவில்லையாயின், வருடாந்த இடமாற்றங்களில் வடமாகாண கல்வியமைச்சு பாரிய விளைவுகளை சந்திக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 


Wednesday, November 11, 2020

வடமாகாண கல்வித்துறை மோசடிகள்: கல்வி அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும்! - இலங்கை ஆசிரியர் சங்கம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற பல மில்லியன் மோசடி தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் கல்வி அதிகாரிகளின் போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் கல்விப் புலத்தின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை அமைக்க ஆளுநரும் பிரதம செயலாளரும் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் தெரிவிக்கையில் - 

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற பல மில்லியன் மோசடி தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளே முழப்பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் கல்வி அதிகாரிகளின் போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இவ்விடயம் கணக்காய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கல்வி அதிகாரிகளின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் வடமாகாண கல்விப் புலத்தில் புதிய விடயமல்ல. மாறாக, வரம்புக்கு மீறிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதாலேயே இவ்விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வடமாகாண கல்விப் புலத்தில் சீரான கணக்காய்வு மேற்கொண்டால் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளிவரும்.  

இதற்கு முன்னரும் கல்வித்துறைசார்ந்து பல இடங்களில் மோசடிகள் நடைபெற்றிருந்தது. இன்றும் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்களை வடமாகாண கல்வி அதிகாரிகள் காத்துவருவது தொடர்பாக, பல தரப்பினர்களிடம் முறையிட்டிருந்தோம். ஆயினும், அவர்களால், குறித்த அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும் கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டு எமக்கு பிரதியிடப்படும். மேலதிகமாக எவ்வித கரிசனையும் சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 

பிரபாலமான பாடசாலைகள் சிலவற்றின் நிதி மோசடிகள் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதாரங்களை கல்வியமைச்சுக்கு வழங்கியிருந்தது. இன்று வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பாக விசாரணைக்குழுவை அமைப்பதும் பின்னர் அதனை இழுத்தடிப்பதுமே வழக்கமாகவுள்ளது. 

மாறாக, கல்விப் புலத்தில் நடைபெறும் மோசடிகளையும், முறைகேடுகளையும் எதிர்த்து, அதனை வெளிக்கொண்டு வருபவர்களை, குழப்பவாதிகள் போல் சித்தரித்து அவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதே வடமாகாண கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட சாதனையாகவுள்ளது. 

முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பல லட்சங்கள் மோசடி செய்தமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தது. அவற்றுக்கு நடவடிக்கை எடுக்காது அதிகாரிகள் இருந்தபோது, இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய பல தொழிற்சங்கப் போராட்டங்களை செய்தே பணிப்பாளரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரமுடிந்திருந்தது.  விசாரணையின்போது அவரால் பண மோசடி உள்ளிட்ட பல  முறைகேடுகள் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டு, மோசடி செய்த பல லட்சம் ரூபா தொகை பணம், மீளளிப்பு செய்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் மடு வலய பணிப்பாளராக பதவிஉயர்வு வழங்கியிருந்தனர். 

ஒருவர் பணமோசடி செய்தால் மீளளிப்பு செய்வதன் மூலம் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலைமையே வடமாகாணத்தில் உள்ளது. அவர்களுக்கு உரிய வேளைகளில் பொருத்தமான இறுக்கமான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் அவை முன்னுதாரணமாக இருந்து இன்று பல மோசடிகளை தவிர்த்திருக்கும். 

வவுனியாவின் பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவரின் பல லட்சம் ரூபா மோசடிகள் நிரூபிக்கப்பட்டு, அவரால் பணம் மீளசெலுத்தப்பட்டுமிருந்தது. தண்டனையாக,  55 வயதுடன் குறித்த அதிபர், கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும் என்று பரிந்துரை அமைந்திருந்தது. ஆயினும், மனிதாபிமான அடிப்படை என்னும் போர்வையில், அவரை வேறொரு பாடசாலைக்கு அதிபராக நியமித்துள்ளனர்.  அங்கு இன்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பாடசாலைக்கு அருகாமையில் மதுவிற்பனை நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்த்துவந்த நிலையில், மதுவிற்பனை நிலையம் அமைக்க ஆட்சேபனை எதுவுமில்லை என கடிதம் வழங்கியவரும் குறித்த அதிபரேயாவார். இதற்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டே அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர். 

தீவகப் பிரதேசத்தின் பாடசாலையில், உளவியல் சீரற்ற அதிபர் ஒருவர் அடாவடியிலும், மோசடியிலும் ஈடுபட்டு ஆசிரியர்களை அச்சுறுத்திவருவதுடன், பாடசாலை சொத்துக்களை கையாடியிருந்தார். குறித்த அதிபர் பொருட்களை வெளியே எடுத்து சென்றதை கண்டித்திருந்த ஆசிரியருக்கு, புனைவான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி இடமாற்றம் வழங்கியிருந்தனர். குறித்த அதிபரின் கட்டட ஒப்பந்த மோசடி தொடர்பாக, ஒப்பந்தக்காரரால் காவல் துறையில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றபோது, ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்’ என்றே பதிலளிக்கப்பட்டிருந்தது. 

பல மோசடிக்காரர்கள் இன்று கல்விப் புலத்தில் கௌரவமாக நடமாடுவதற்கு வடமாகாண கல்வி அதிகாரிகளே அனுமதியளித்துள்ளனர். முறையற்ற வகையில் சட்ட வலுவற்ற விடுவிப்புக்களை வழங்கி, பல ஆசிரியர்களின் பணங்கள் மோசடி செய்யப்படுவதற்கு கல்வி அதிகாரிகள் இன்றும் துணைபுரிந்துவருகின்றனர். இவர்களின் துணையுடன் பாடசாலைகளில் ஒருபோதும் கடமையாற்றியிராதவர்களை, தொண்டர் ஆசிரியர் நியமனத்தின் மூலம் மோசடியாக உள்வாங்கியுள்ளனர். இவை அதிகாரிகளின் துணையின்றி ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. இவ்வாறான முறைகேடுகள் ஏதோவொரு இலாப நோக்கம் கருதியே நடைபெற்றிருந்ததாக அறிய முடிகின்றது. இவ்விடயம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தும், இன்றுவரை மௌனமாகவே இருந்துவருகின்றனர்.  அவற்றை சீர்செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், தகுதியற்றவர்கள் மூலம் கல்வி சீரழிவதற்கு அதிகாரிகளே துணைநிற்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். 

கடந்த வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி, வடமாகாண கல்வியமைச்சு முறையற்ற அதிபர் நியமனங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அதிபர் நியமனம் சீர்செய்யப்படாமலேயே மூடி மறைக்கப்பட்டது. இன்றுவரை சீர்செய்யப்படவில்லை. மாறாக, முறைகேடான வகையில், பாடசாலைக்கு நியமனம் பெற்ற அதிபரின் முறைகேடுகளுக்கும், ஏதேச்சதிகாரங்களுக்கும் அதிகாரிகள் துணைநிற்பதுடன் - முறைகேடுகளை எதிர்க்கும் ஆசிரியர்களுக்கு - இடமாற்றச்சபையின்றி தன்னிச்சையாக முறையற்ற இடமாற்றங்களை வடமாகாண அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இவ்வாறு பலரின் முறைகேடுகள் அதிகரிப்பதற்கு வடமாகாண அதிகாரிகளே தொடர்ச்சியாக துணைபோகின்றார்கள்.  

வடமாகாண கல்வி வலயங்களில், தகுதியற்ற பெறுபேறுகளுடன் முறைகேடான நியமனத்தினூடாக - ஆசிரியர்கள் என்னும் போர்வையில் - பலரை வடமாகாண கல்வி அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு உள்ள ஒருவர் தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளுக்கு நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தபோது, அந்த அதிகாரி ‘இதுபோன்று பலர் இருக்கிறார்கள்’ என பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துமிருந்தார். அவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் நேரடியாகவே வலியுறுத்தியிருந்தபோதும், இன்று வரை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டே வருகின்றார்கள்.  

அதிகாரிகள் சிலர் தமது சொத்துக்களை, தமது உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றி, கூறுவிலைகோரலில் மோசடிசெய்து, அரச நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கி உழைத்துவருகின்றனர். வியாபார நோக்கில் அனைத்தையும் சிந்திக்கும் சில அதிகாரிகள், வடமாகாண கல்வியையும் வியாபாரமாக்கி, வடமாகாண கல்வித்துறையை ஊழல்களும், மோசடிகளும், முறைகேடுகளும் நிறைந்த இடமாக இன்று மாற்றியுள்ளனர்.

பல மோசடிகள் நிறைந்துள்ள வடமாகாண கல்வித்துறையை சீரமைக்குமுகமாக, கல்வியமைச்சின் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குழு அமைக்குமாறு வடமாகாண பிரதம செயலரை இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டிருந்ததோடு, வடமாகாண ஆளுநருக்கும் பிரதியிட்டிருந்தது.  சாட்சியங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. ஆயினும், எவ்வித நடவடிக்கைகளும் வடமாகாண பிரதமசெயலரோ அல்லது ஆளுநரோ எடுக்க முன்வராதமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். 

எனவே – கல்வியதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்கமாகத் தெரிவிப்பதோடு, அவ்விசாரணைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவிக்கின்றோம்.