Thursday, July 30, 2020

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு – இலங்கை ஆசிரியர் சங்கம் தலையீடு



வேம்படி மகளிர் கல்லூரியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேர்தல் கால அதிபர் நியமனம் தொடர்பாக – கல்வியமைச்சில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்புகொண்ட போது – தற்போது நியமிக்கப்பட்டவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், நிர்வாக மேன்முறையீட்டு தீர்பாயத்தின் (AAT) பரிந்துரைக்கமைவாக பிரதி அதிபராகவே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும். நிர்வாக விடயங்களில் அவர் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னர் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டவரே அதிபராக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் - நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராலேயே இவரே அதிபர் எனக் அறிமுகப்படுத்தி முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சை தொடர்பு கொண்ட போது - இந்த விடயத்தில் தலையிடுவதற்கு யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கல்வியமைச்சு இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலமாக முறையிடவுள்ளது. 

Friday, July 24, 2020

கலாநிதி குருபரனின் பதவி விலகல் தொடர்பாக இ.ஆ.சங்கம், ப.மா.ஆணைக்குழுவுக்கு கடிதம்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன், காணாமல் போனோர் தொடர்பான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழக்கில் சம்பந்தப்பட்டமைக்காக - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவசியமற்ற  அழுத்தத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துக்கு ஏற்படுத்தியமை தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் சுயாதீன தன்மையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை 2011 இலிருந்து அவரை நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்த நிலையில் - இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அவசியமற்ற தலையீடு கவலையளிக்கிறது.

தாம் பணியாற்றும் துறைசார்ந்து, அதனை விருத்தி செய்யும் பொருட்டு, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தமது துறைசார் அனுபவத்துக்காகச் செயற்படுவது சாதாரணவிடயமாகும். அதன் அடிப்படையில் ஏனைய பல்கலைகலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை உண்டு.

காணாமால் போனோர் தொடர்பான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வடக்குப் பகுதியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சமூக வேண்டுகோளாகும்.

இந்த நிலையில் - தனது சட்டப் புலமை மூலம் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு கலாநிதி குமாரவடிவேல் குமரகுருபரன் சட்டத்தரணியாக செயற்பட முன்வந்திருந்தமை வரவேற்கக்கூடிய செயற்பாடாகும்.

இதற்காக முன்னர் எந்தவகையான தடையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விதித்திருக்கவில்லை. யாழ்.பல்கலைக்கழகப் பேரவை தனது சுயாதீனத்தன்மையின் அடிப்படையில் 2011 முதல் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது பேரவையின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டத்துறையில் புலமைவாய்ந்த கலாநிதி குருபரனை பல்கலைக்கழக செயற்பாட்டிலிருந்து விலகவைப்பதானது, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இவ்விடயம் தொடர்பாக, ஆராய்ந்து, பொருத்தமான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

Saturday, July 4, 2020

இடர் நிலையை கவனத்தில் கொள்ளாது, சுற்றுநிருபத்தை மீறும் கல்வி அதிகாரிகள்: பிரஜைகளின் வாழும் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது! - ஜோசப் ஸ்ராலின் -


கொரோனா ஆபத்துக்களை தவிர்த்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக -  கல்வியமைச்சின் ED/01/12/06/05/01 இலக்க சுற்றுநிருபம் -ஆசிரியர்களின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் - தடையற்ற கல்வியையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இச் சுற்று நிருபத்தில், ஒவ்வொரு ஆசிரியரும் தனது முதல் பாடவேளை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது எனவும் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும். எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் - கல்விசார் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை தொடர்பாக பொது 18 ஆவணம் அல்லாமல், அதன் மாதிரியான தனியான ஆவணமொன்றையே பேணுமாறும் சுற்றுநிருபம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை - எதிர்வரும் நாட்களில் பகுதிபகுதியாகவே வகுப்புப் பிரிவுகள் ஆரம்பமாக உள்ளன. பாடவேளைகள் இல்லாத ஆசிரியர்களையும் காலை 7.30 மணி முதல் பாடசாலை நிறைவடையும் வரை மறித்து வைப்பதும் - சுற்றுநிருபத்தில் கூறப்படாததும் சுகாதார பரிசோதகர்களால் பரிந்துரைக்கப்படாததுமான விரலடையாள இயந்திர பதிவு முறைகளை திணிக்க முயற்சிப்பதும், ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத அதிகாரிகளின் வன்மம் கொண்ட செயற்பாடாகும்.

ஆசிரியர்களினதும் சமூகத்தினதும் பாதுகாப்பு தொடர்பில் கிஞ்சித்தும் சிந்திக்காத கல்வி நிர்வாக அதிகாரிகள், கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு மாறாக, வக்கிர எண்ணத்துடன் செயற்பட முயல்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கொவிட் -19 நோயின் தாக்கமானது சிறுவர்களை விட பெரியவர்களையே அதிகளவில் பாதித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூர இடங்கள் பயணம் செய்து பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் பாடசாலைகளில் ஆட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றினூடாக -  அவசியமான  சந்தர்பங்களில் மட்டும் செயற்பட்டு -  சமூக இடைவெளியைப் பேணி – மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கொவிட் -19 நோயின் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தமுடியும்.

கொவிட் -19 தாக்கத்திலிருந்து முற்றாக விடுபடுவதற்கான செயற்பாடுகள் நாடுதளுவிய ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில் - சமூக இடைவெளியை இயலுமான வரையில் பேணும் முகமாகவே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வியமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபமும் இவற்றைக் கவனெடுத்திலெடுத்தே வெளியிடப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

பல நாடுகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நோயின் தாக்கமும் அதிகரித்திருந்தது. ஆயினும் இங்குள்ள கல்வி நிர்வாகிகள் - மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்குக் கட்டுப்படாமலும், ஆசிரியர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளாமலும், இந்த இடர்கால நிலையை கருத்திலெடுக்காமலும் செயற்படுவதானது, மிக ஆபத்தான கட்டத்துக்கு இந்த நாட்டைக் கொண்டுசெல்லும்.

சுற்றுநிருபங்கள் கூறும் அறிவுறுத்தல்களைத் தவிர்த்து - தான்தோன்றித்தனமாக - ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பில் கவனம் செலுத்தாத கல்வி அதிகாரிகளின் கீழ்தர மன நிலையால் - முழு நாடும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலையே ஏற்படவுள்ளது. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சும் உடன் தலையிடவேண்டும்.

இடர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் செயற்படும் கல்வி நிர்வாகிகளின் சமூகப் பொறுப்பற்ற அணுகுமுறையால் - பிரசைகளின் உயிர்வாழும் உரிமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்