Friday, October 11, 2019

அதிபர், ஆசிரியர் இடைக்கால சம்பள திட்டம்; அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம்!



இன்று 11.10.2019 சம்பளஆணைக்குழுவினருக்கும், கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அவர் சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்கையில்-
இதுவரை அதிபர்,ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு எதுவும் இல்லை என கூறிவந்தவர்கள், 
அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாடு உள்ளதாக வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் இடைக்கால சம்பள திட்டம் தயாரிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொண்டமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கமைய அந்த இடைக்கால சம்பள திட்டத்தை தயாரித்து - அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும் என உறுதியளித்துள்ளனர்.

 முழு சம்பள முரண்பாட்டையும் நீக்க புதிய ஆணைக்குழுவை உருவாக்கி அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதாகவும் இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, October 8, 2019

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; நாளை மேலுமொரு அமைச்சரவைப்பத்திரம்!



கல்வியமைசாசின் செயலாளருக்கும் அதிபர், ஆசிரியர் தொழில் சங்கங்களுக்குமிடையில் இன்று 08.10.2019 மாலை சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்வியமைச்சு, தொழிற்சங்கங்களுடனான சந்திப்பு சம்பள ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை 09.10.2019 நடைபெறவுள்ள அமைச்சரவையில் சம்பள சீராக்கம் குறித்த கடந்த அமைச்சரவை தீர்மானத்தின் விரிவாக்கம் குறித்து கல்வியமைச்சால் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அவசியமற்ற தாள்கள் நிரப்பும் செயற்பாடு குறித்தும் தெளிவான சுற்றறிக்கையொன்று கல்வியமைச்சால் வெளியிடப்படவுள்ளது.

தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் வழங்குவது தொடர்பாகவும் எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.

Saturday, October 5, 2019

வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளரின் அடாவடி செயற்பாடுகள்; ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


வடமாகாணத்தின் வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரால் முறைகேடான விதத்திலான இடமாற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இடமாற்றச்சபையின் எந்த அங்கீகாரமும் இன்றி சில ஆசிரியர்களைப் பழிவாங்குவது போன்றும், சில தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் செயற்படுத்தும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரின் மிக மோசமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்விடயங்கள் தொடர்பாக -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இதுவரை  பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாமையே - வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரின் இத்தகைய செயற்பாட்டுக்குக் காரணமாகும்.

சாதாரணமாக தேர்தல் காலங்களில் எந்த இடமாற்றங்களையும் வழங்க முடியாது. இத்தகைய சூழலிலும் வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர் இடமாற்றங்களைத் தொடர்ச்சியாக முறைகேடாக செய்துவருவது - அரசியல் பின்புல செயற்பாடாக இருக்கலாம் எனவும் நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆசிரியர்களின் மேன்முறையீடுகளுக்கு கூட சந்தர்ப்பம் வழங்காமல் - அவர்கள் பணியாற்றிய பாடசாலைகளில் கையொப்பமிட அனுமதிக்காமல் அடாவடித்தனமாக செயற்பட்டு வருகின்றார். ஆசிரியர்களுக்கு உள்ள மேன்முறையீடு செய்யும் உரிமையை நசுக்கும் அளவுக்கு வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு - சட்டத்தை மீறும் அதிகாரங்களை வழங்கியது யார்?

இவரின் இந்த அடாவடித்தனத்துக்கு - வடமாகாண கல்வியமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வடமாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையில் நடந்த சந்திப்பில் - தொழிற்சங்கங்களுடன் கல்வியமைச்சும் வெளிப்படைத் தன்மையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
இச்சந்திப்பில் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், வடமாகாண கல்விப்பணிப்பாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் - இந்த முறைகேடான இடமாற்றங்கள் தொடர்பான விபரத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வலிகாமம் வலயக்கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோதும் - எமக்கு விபரங்கள் தொடர்ச்சியாக மறைக்கப்படுகின்றன.

வடமாகாண ஆளுநருடனான சந்திப்பில் எட்டப்பட்ட கருத்துக்களை மதித்து - நாம் பல தடவைகள் வடமாகாண கல்வி செயலருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்திருந்த நிலையில் - இத்தகைய பல முறைகேடான இடமாற்றங்களிற்கு நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன? என்பதை வடமாகாண ஆளுநர் கண்டறிய வேண்டும்.

இடமாற்றச்சபையின்றி வலிகாமம் கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் அனைத்ததையும் உடன் நிறுத்தி - வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் -  வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.