Monday, June 17, 2019

வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளுக்கு விசாரணை கோருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்



நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் வடமாகாண கல்வியமைச் சின் செயற்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை ஆசிரிய சங்கம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கடிதம் மூலமும் மின்னஞ்சல்  மூலமும் கோரிக்கை விடுத்துள்ளனர்

அண்மையில் ஆளுநர்  பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வொன்றில் - கடந்த கால கல்வி தொடர்பான செயற்பாடுகளில் முன்னாள் வடமாகாண சபையின் அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன என்றும் இந்நிலையில் - இன்றைய வடமாகாண கல்வியமைச் சின்   முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்களிலிருந்து வடமாகாண கல்வியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கச்சார்பற்ற விசாரணைப்பொறிமுறை உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சகல ஆதாரங்களுடனும் -சாட்சியாளர்களுடனும் சாட்சியங்களை வழங்கத் தயாராக வுள்ளோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் அனுப்பிய முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

வடமாகாணத்தில் கல்வியமைச்சின் செயற்பாடுகள் - முறைகேடுகள் - பக்கச்சார்புகள் என நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது.  ஊழல்வாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடு களும்முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவர்களை பழிவாங்கும் போக்கும் - குற்ற உணர்வு சிறிதுமற்று செயற்படும் வடமாகாணக் கல்வியமைச்சின்செயற்பாடுகள் மிகுந்த கண்டனத்துக்குரியது.

நாகரிகமான சமூகமாக - நெறிமுறையுடன் வளர்க்கப்படவேண்டிய கல்வித் துறையினை – நாசமாக்கும் விதத்தில் செயற்படுகின்றமை தொடர்பாக பொறுப்புக்கூறல் அவசியமானதாகும். இவ்விடயங்கள் தொடர்பாக அதிககவனம் எடுத்து விசாரணைக் குழு ஒன்றை நியமித்து - வடமாகாணகல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பக்கச்சார்பற்ற விசாரணைப்பொறிமுறை உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சகல ஆதாரங் களுடனும்,சாட்சியாளர்களுடனும் சாட்சியங்களை வழங்கத் தயா ராகவுள்ளோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

வடமாகாணகல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்னிலைப் படுத்துகின்றோம்.

1.   வவுனியா விபுலானந்தா ம.வி.யில் அதிபராக இருந்தபோது திரு.க. தனபாலசிங்கம் என்பவர் பல லட்சம் மோசடிசெய்திருந்தமை விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது. தண்டப் பணத்துடன் அவருக்கு 55 வயதுடன் கட்டாயஓய்வில் செல்ல விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது. அதனடிப்படையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருந்தார். ஆயினும் - வடக்கு மாகாணபொதுச்சேவை ஆணைக்குழுவிடம் குறித்த அதிபர் மேற்முறையீடு செய்திருந்தநிலையில் - குறித்த கட்டுப்பாட்டு நிபந்தனைகளை விதித்து அவருக்கு வவுனியா தெற்கு வலயத்துக்கு அப்பால் பணியாற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்திருந்தது. இவருக்கு எதிராக சுமத்தப்பட்டி ருந்த 12 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் - வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவும் ஊழல்வாதிக்கு சலுகை காண்பித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதற்கும் அப்போது நாம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அதன் பின் வவு/ஓமந்தை மகா வித்தி யாலயத்தில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டபோது–தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் ஊழல்வாதியாக நிரூபிக்கப்பட்டி ருந்த  திரு.தனபாலசிங்கத்துக்கே வடமாகாணகல்வியமைச்சால் அதிபர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனம் தவறானது என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையி லும்இந்தமுறைகேடு நடந்தது. இதனால் இந்த அதிபர் நியமனம் முறைகேடானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் வவுனியா பிராந்திய காரியாலத்தில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டது. (முறைப்பாட்டு இலக்கம் HRC/V/045/2018/(V). பலகட்டவிசாரணைகளின் அடிபடையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 18.02.2019 ம் திகதிய தனது பரிந்துரையில் வவு/ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபராக திரு.க.தனபாலசிங்கத்துக்கு வழங்கப்பட்ட நியமனம் தவறானது எனத் தெரிவித்து வடமாகாண கல்வியமைச்சுக்கு அறிவித்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தது. இன்று வரை வடமாகாண கல்வியமைச்சால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே அதிபர்தான் - ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகில் - மதுபான நிலையம் அமைப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனகடிதம் வழங்கி– பாடசாலையின் அருகில் மதுபானநிலையம் அமைவதற்கும் காரணமானவராவார். இதற்கெதிராக அப்பிரதேச சமூகத்தால் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் - பிரதிஅதிபரை அச்சுறுத்திய நிலையில் அவர் மயக்கமடைந்ததாகவும் அண்மையில் ஊடகங்களில்வெளிவந்தசெய்தியும் இவர் தொடர்பானதேயாகும். இவரையே வடமாகாணகல்வியமைச்சு சட்டத்தையும் உதாசீனம் செய்துகாப்பாற்றிவருகின்றது.

2.   இடமாற்றச்சபை தீர்மானத்தின் அடிப்படையில் - தொடர்ச்சியாக ஒரேபாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றியோருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் - குறித்த ஒரு ஆசிரியைக்கு மட்டும் சில மாத காலத்திலேயே மீண்டும் அவர் ஏற்கனவே பணியாற்றியிருந்த யா/கொக்குவில் இந்துக் கல்லூரிக்கே முறையற்ற இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடமாற்றகடிதம் அப்போதய வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரினாலேயே வழங்கப்பட்டிருந்தது. வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடித்துடன் வழங்கப்பட்ட இடமாற்றம் முறைகேடானது எனவும்-அவர் ஒரு திணைக்களத்தலைவர் அல்ல என்பதையும் பலதடவைகள் வடமாகாண கல்வியமைச்சுக்கு வலியுறுத்தியிருந்த நிலையிலும் - வடமாகாண கல்வியமைச்சும் தொடர்ச்சியாக முறைகேட்டை ஆதரித்துவந்தது. இந்நிலையில் - இந்த முறைகேடான இடமாற்றத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுசெய்யப்பட்டது. (முறைப்பாட்டிலக்கம் -HRC/JA/069/2018விசாரணைகளின் போது - இந்தமுறைகேட்டை நிவர்த்தி செய்வதாகத் தெரிவித்து – குறித்த ஆசிரியையை யா/கோண்டாவில் இராமகிருஸ்ணா பாடசாலைக்கு இடமாற்றுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கல்வியமைச்சு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆயினும் - அதன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய உறுதி மொழியும் உதாசீனம் செய்யப்பட்டு இன்றுவரை குறித்த ஆசிரியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே பணியாற்றிவருகின்றார். இதற்காக போலியான இழுத்தடிப்புக் களைச் செய்து வடமாகாணகல்வியமைச்சு அனுமதித்துள்ளது. குறித்த ஆசிரியை சார்பான முறைகேடுகளுக்கு துணைபோகும் வடமாகாண கல்வியமைச்சு ஏனைய ஆசிரியர்களுக்கு 7 வருடங்கள் ஒரே பாடசாலையில் பணியாற்றியிருந்தால் - கட்டாயம் இடமாற்ற விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற புதிய நிபந்தனையையும் விதித்துள்ளமை வடமாகாண கல்வியமைச்சில் நிலவும் பார பட்சங்களினையும் தெளிவுபடுத்துகின்றது.

3.   யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட தவறான நிதிநடவடிக்கைகள்அரச சுற்றுநிருபங்களை முறையாகப் பின்பற்றாமல் நிதி அறவிட்டமைபற்றுச்சீட்டுவழங்காமைதவறான காசோலைப் பயன்பாடு,நிதிகணக்கில் வைப்பிலிடாதமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. (குற்றப்பத்திர இல. NP/3/2/GA/6/jaf/01/03)இதற்கமைய தண்டப்பணமும் கட்டிய இந்த அதிபரை மீண்டும் அதே பாடசாலைக்கே வடமாகாண கல்வியமைச்சு நிலைப்படுத்தியுள்ளமை தவறானதாகும். அதேவேளை– குறித்த அதிபரின் மோசடிகளை வெளிக் கொணர்ந்திருந்த பாடசாலையின் பிரதிஅதிபரும்ஆசிரியர் ஒருவரும் வேறுபாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் பலகுற்றங்கள் அதிபரில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்- அதே பாடசாலைக்கே அதிபராக மீண்டும் நிலைப்படுத்துவதும்,முறைகேடுகளை வெளிக் கொணர்ந்தவர்களை தண்டிப்பது போன்ற செயற்பாடுகளும் வடமாகாண கல்வியமைச்சு முறைகேடுகளிற்கே ஆழமாகத் துணைபுரிந்து வருவதை வெளிப்படுத்துகின்றது.

4. யாழ்........ ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரின் முறை கேடுகளுக்கு துணைபுரிந்திராத அந்தப் பாடசாலையின் பிரதி அதிபரை இடமாற்றம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் -26.02.2019 திகதிய கடிதம் மூலம் கௌரவ ஆளுநராகிய தங்களுக்கு குறித்த அதிபரால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் நீதியான விசாரணையை நாம் கோரியிருந்தோம். இதனடிப்படையில் - வடமாகாண கல்வி யமைச்சால் ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே நடை பெற்றுள்ளது. 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வடமாகாணகல்வியமைச்சால் எவ்விதநடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. இதனையும் வடமாகாணகல்வியமைச்சு மூடிமறைத்து முறைகேடுகளுக்கு துணைபோகும் தன்மைகள் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளன.

5.   தமது பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் முறையற்ற மாணவர் அனுமதி தொடர்பாகவும்பாடசாலை மாணவர்களின் அனுமதிக்குஅதிபரால் பெருந்தொகைப் பணம் அறவிட்டமை தொடர்பாகவும்அறவிடப்படும் முழுத்தொகைக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்பதையும் குறிப்பிட்டு - அப்பாடசாலையின் பிரதி மற்றும் உதவிஅதிபர்கள் தங்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இவ்விடயம் தொடர்பாக தங்களின் உதவிச்செயலாளரின் 25.03.2019 திகதியிடப்பட்ட G/NPC/A7/Edu/Sc/Matt/2019/015  இலக்ககடிதம் மூலம் வடமாகாணகல்வியமைச்சின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ¬இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதுபற்றி அறியத்தருமாறு கேட்கப்பட்டது. ஆயினும் - வடக்கு மாகாணகல்வியமைச்சினால் இன்றுவரை ஆரம்ப கட்டவிசாரணை கூட நடைபெறவில்லை என்பதும் குறிப்பி டத்தக்கது.

6.   விசேட கல்விக்கான மாகாணஉதவிக் கல்விப் பணி;ப்பாளர் நியமனத்தில் நிகழ்ந்த பாரபட்சம் தொடர்பாகவும் – இலங்கை கல்வி நிர்வாகசேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் நடாத்தப்படாதமை தொடர்பாக ஆராயுமாறும் வடமாகாண கல்வியமைச்சிடம் கேட்டிருந்தோம். ஆயினும் -  தம்மால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களை நியமிக்கத் துடிக்கும் வடமாகாண கல்வியமைச்சின் பாரபட்சமான எண்ணத்தினாலும்-அதற் கேற்றாற்போல் - ஒவ்வொரு நேர்முக தேர்வு சந்தர்ப்பங்களிலும் தமது இலக்கு நோக்கிய வேறுப்பட்ட நிபந்தனைகளை விதித்து தமக்கேற்றாற்போல் செயற்படும் தன்மையாலும் - நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிராத நிலையிலேயே– பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. 

வடமாகாண கல்வியமைச்சில் நீதியை போராடித்தான் பெறவேண்டும் என்ற மனநிலையில் ஒரு சிலர் மட்டும் செயற்பட - ஏனையவர்கள் தமக்கு முன்னால் நடக்கும் முறைகேடுகளை விரக்தியுடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளமை வடமாகாண கல்விபுலத்தின் சாபக்கேடாக மாறியுள்ளமை துரதிஸ்டவசமான தாகும்.

அண்மையில் தாங்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வொன்றில் - கடந்தகால கல்வி தொடர்பான செயற்பாடுகளில் முன்னாள் வடமாகாண சபையின் அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் - இன்றைய வடமாகாண கல்விய மைச்சின்  முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்களிலிருந்து வடமாகாணகல்வியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டிநிற்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Friday, June 14, 2019

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விசாரணைக்கு வலியுறுத்து!

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் ;- உரிய நடடிவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேல்மாகாண ஆளுநர் முசாமிலிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை 12.06.2019 அன்று மேல் மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையேயான சந்திப்பின்போது மேல்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விஜயபந்து, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரத்மலானை இந்துக் கல்லூரியில் விளையாட்டுக்கான பயிற்சி பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதில் 35 பேரே பயிற்சி பெறுகின்றனர். இரத்மலானை இந்துக் கல்லூரியின் விடுதியில் 86 பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் மாதாந்தம் 5000 ரூபா பணமும் அறவிடப்பட்டுள்ளது.

2018 இல் மட்டும்  விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக ரூபா 15 லட்சம் வீதம் 3 தடவைகள் காசோலை மூலம் ரூபா 45 லட்சம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான சத்துணவுக்காகவும் வழங்கப்பட்டது. பயிற்சிபெறும் மாணவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக் கூடியதான – தினமும் வழங்கப்படவேண்டிய சத்துணவு தொடர்பான அட்டவணைபடியே வழங்கப்படவேண்டும்.
ஆனால் - அதிபரால் மிகத் தரம் குறைந்த உணவுகளே விடுதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் - அந்த உணவையே விளையாட்டுப் பயிற்சி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்துடன் வழங்கப்பட்ட பருப்பு கறியிலும் புழுக்கள் இருந்துள்ளமை பரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மதியம் சமைத்த உணவுகளே பல தடவைகள் மாணவர்களுக்கு இரவு உணவாகவும் வழங்கப்பட்டிருந்தது. விடுதி மாணவர்களிடம் அறவிடப்படும் தொகைகள் தொடர்பாகவும் எவ்வித கணக்கும் காட்டப்பட்டிருக்கவில்லை. பணத்தினை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கே அதிபர் வைப்பிலிட்டுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யும்போது - கூறுவிலைகோரப்பட்டிருக்கவில்லை.
விளையாட்டுப் பயிற்சிகளுக்கு தரமான பயிற்றுவிப்பாளர்களை வழங்காமல் சந்தர்ப்பத்துக்கேற்ப ஆட்களை நியமித்து செயற்பட்டுள்ளார். இவை அனைத்தின் மூலம் பெருந்தொகையான ஊழல் மோசடியில் குறித்த அதிபர் ஈடுபட்டிருந்தமை பிலியந்தல கல்வி வலயத்தினால் 31.10.2018 திகதிய விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. ரூபா 1500 க்கு மேற்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் காசோலை மூலமே வழங்கப்படவேண்டும். ஆனால் - அனைத்துக் கொடுப்பனவுகளும் பணமாகவே வழங்கப்பட்டுள்ளன. விடுதி மாணவர்களிடமிருந்து 2016 -2018 ஆம் ஆண்டு வரை அறவிடப்பட்ட பல லட்சம் ரூபா பணம் தொடர்பாக பற்றுச்சீட்டுக்கள் எவையும் இல்லை. அப்பணம் எங்கே என்னும் விடயமும் தெரியாதுள்ளது.
அத்துடன் - தமிழ் மாணவர்களை காரணம் காட்டி புலம்பெயர் மக்களின் உதவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நிதி தொடர்பாகவும் கணக்குகள் இல்லை.
மாணவர்களின் உணவுத் தேவைகளுக்காக “ஓசானிக்” எனும் பெயருடைய கம்பனியொன்று அரிசியை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதிலும் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளது.
இது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதுடன் - பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரோகத்தனமான செயற்பாடுமாகும்.  குறித்த பாடசாலை ஆசிரியர்களும் அதிபரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் - மேல் மாகாண தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளரும் இந்த அதிபரின் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.