Friday, August 6, 2021

அதிபர், ஆசிரியர்களின் பேரணிக்கு ஆதரவு வழங்க அழைப்பு!


எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள அதிபர், ஆசிரியர் பேரணிக்கு, போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலவச கல்வியில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை வலியிறுத்தியும், இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர் சங்கம், வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபம் முன்பாக ஆரம்பித்து மாவட்ட செயலகம் வரை வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த வாகனப் பேரணியில் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்பதுடன், எமது போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க அழைப்பு விடுக்கின்றோம்.

Sunday, August 1, 2021

ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு 

 கல்வி அமைச்சின் செயலாளரால் ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு தெரிவித்து கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் ED /09/12/06/01/02/2021இலக்க கல்வியமைச்சின் கடிதத்தின் படி சமூகமளிக்க மாட்டார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கூட்டாக கையொப்பம் இட்டு கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை தொடங்காமல் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது ஆசிரியர்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கம் கொண்ட அரசின் கபட நாடகம் எனவும், அதிபர் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அதிபர், ஆசிரியர் அடிபணியாமல், அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்தில் அனைவரும் கரம் கோர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.