Sunday, May 5, 2019

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு பொது அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம்.


யாழ். பல்கலைகழகத்தில் கடந்த 03.05.2019 அன்று நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது – இராணுவத்தினராலும் பொலிசாராலும் கைதுசெய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரின் அவசியமற்ற கைதைக் கண்டித்தும் - மூவரையும் உனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கம், பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு, புதிய அதிபர்கள் சங்கம், மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு, வடமாகாண அபிவிருத்தி உத்யோகத்தர் சங்கம் ஆகிய 10 பொது அமைப்புக்கள்  கூட்டாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  -

அண்மையில் நாட்டின் தலைநகர் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை காரணம் காட்டி - நாட்டின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது - அப்பாவி மக்களின் நலன்களையோ அன்றாட நடவடிக்கைகளையோ பாதிக்காத வகையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்;

நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 06.05.2019 முதல் பாடசாலைகளை இயங்குவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதேபோன்று கடந்த 03.05.2019 அன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது –அவசியமற்ற காரணங்களை முன்வைத்து இரண்டு மாணவர் தலைவர்களும்  பல்கலைக்கழக சிற்றூண்டிச்சாலை நடத்துனரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது  தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் - அரச தரப்பின்மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சோதனை நடவடிக்கையானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அழைப்பின் பெரிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்புடைய  நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் நடந்துள்ளதாகவே கருதுகின்றோம். யாழ்.பல்கலைகழக வரலாற்றில் முதல் தடவையாக படைத்தரப்பை அழைத்தவர்கள் மாணவர்களினதும்  ஏனைய ஊழியர்களினதும்; பாதுகாப்புத்; தொடர்பாகவும் முற்கூட்டியே சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன்- மாணவர்கள் கைதுசெய்யப்பட்டவுடன் பொருத்தமான நடவடிக்கை முயற்சிகளை பல்கலைக்கழக உயர் நிர்வாகத்தினர் மேற்கொள்ளவில்லை.  பொலிஸ் நிலையம் சென்று பார்வையிடவும் இல்லை. அவர்களின் நலன்கள் பாதுகாப்புத் தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கைகளையயும் அன்றைய தினம் மேற்கொண்டிருக்கவில்லை. இச்செயற்பாடுகள் மிகவும் வேதனையளிக்கும் விடயமாக உள்ளதுடன் - இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் எமக்கு சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றது.

சாதாரண ஒரு சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இச்செயலை பொது அமைப்புக்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மறுபக்கத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கென்று பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றி – நிறைவேற்ற வேண்டிய கடமையைத் திசைதிருப்பும் முகமாக - மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் திருப்பி அரசாங்கம் செயற்பட விளைவதானது – சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மனோநிலையிலேயே தமிழ் மக்கள் நோக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு சாதாரண நடவடிக்கையின் நிமித்தம் அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது எமக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

மறுபக்கத்தில் மாணவர்களின் கைதுக்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் கூறப்படும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இதற்கு கைதுசெய்யப்பட்ட மாணவர்களோ,   சிற்றூண்டிச்சாலை நடத்துனரோ காரணம் என்றும் கூறிவிட முடியாது.

ஏனெனில் கைதுக்கு காரணமென்று கூறப்படும் அடையாளங்கள் 10 வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது என்பது தெரியவருகின்றது. அவ்வாறாயின் - வளாக நிர்வாகத்தின் அசமந்த போக்கா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற கேள்வியும் இயல்பாகவே எமக்கு எழுகின்றது.

இத்தகைய அவசியமற்ற கைதுகள் - தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் செயற்பாடுகளாக மாறிவிடக்கூடாது என்பதை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.

எனவே - இந்த நிலமைகளைக் கவனத்தில் எடுத்து -  கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையும்இ சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் உடன் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மூவரினதும் விடுதலை தொடர்பாக பொறுப்போடு செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் அதே வேளையில் - அரசியல் தலைவர்களும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகள் அச்சமின்றி சுமூகமாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தின் பங்காளிகளாகச் செயற்படும் தமிழ் தலைமைகள் இவ் விடயத்தில் விரைந்து செயற்பட்டிருந்தால் - கைது இடம்பெறாமலேயே  தடுத்திருக்க  முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதனால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்; கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் ஏற்படக்கூடிய அச்சம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் விரைந்து தீர்க்கப்பட்டவேண்டும். இல்லையேல் - தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திருப்பிவிடப்பட்ட இந்த மோசமான நடவடிக்கைகள் இயல்புநிலையை குழப்பமடைய வைக்கும் செயற்பாடாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.