Wednesday, December 23, 2020

விடுமுறை காலங்களிலும் ஆசிரியர்களை அழைக்கும் கிளிநொச்சி கல்வி வலயம். ஆசிரியர்கள் செல்லத்தேவையில்லை. -ஜோசப் ஸ்டாலின் -


இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை இன்றுடன் அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் விடுமுறை காலத்திலும் ஆசிரியர்கள்  பாடசாலைக்கு வரவேண்டும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று கொத்தணிகளாக உருவாகி வரும் இன்றைய சூழலில், வெளிமாவட்டங்களிலிருந்து சென்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய கால சூழ்நிலையை கூட கருத்தில் கொள்ளாமல், பொலித்தீன் திரையின் பின்னால் அலுவலகங்களில் தம்மை பாதுகாக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களினதும்  மாணவர்களினதும்  பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுத்து இருக்கவும் இல்லை.

எனவே, விடுமுறை காலங்களில் எந்தவொரு ஆசிரியரும் பாடசாலைகளுக்கு செல்லத்தேவையில்லை. விடுமுறை காலங்களில் ஏற்படும்  அதிகாரிகள் எவரினதும்  அச்சுறுத்தல் தொடர்பாக  இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் முறையிட முடியும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Saturday, November 21, 2020

நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாட்டை விடுத்து, கல்வியமைச்சு அனைவருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூடிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் :

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூறிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது. 

நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்ககூடிய வகையில்  பாடசாலை தொற்று நீக்கம் செய்யப்பட்டு துப்புரவு செய்யப்படவில்லை. இன்னொரு பக்கத்தில் டெங்கு நோய் பிரச்சினையும் உள்ளது. இந்த நிலைமைகளில் பாடசாலை மாணவர்களை அபாயத்துக்குள் தள்ளும் செயற்பாடொன்றையே கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸ், போக்குவரத்து துறை ஆகியவற்றைக் கொண்டு குழு அமைக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்படியான குழுக்களை உருவாக்க முடியுமா? 

பாடசாலைகள் நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஆரம்பித்தால், டிசெம்பர் 23 ம் திகதி விடுமுறை கொடுக்கிறார்கள். இக்காலப்பகுதிக்குள் நான்கு வாரங்களே உள்ளன. ஆயினும், தற்போது ஒரு வகுப்பறையில் 15 மாணவர்களையே வைத்திருக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒரு தரத்தில், வகுப்பில் இந்தவாரம் 15 மாணவர்களையும், அடுத்தவாரம் 15 மாணவர்களையும் கொண்டே வகுப்புக்கள் நடத்தப்படவேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அப்படியானால், இரண்டு வாரத்துக்குரிய கல்வி நடவடிக்கையே நடைபெறப்போகின்றது. இவைகள் அனைத்தும் திட்டமில்லாமல் செய்யப்படும் செயற்பாடாகும். 

கொவிட் 19 சமூகத் தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில், திட்டமில்லாத வகையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

எனவே, பாடசாலைகள் ஆரம்பிப்பதாக இருந்தால், பாடசாலைகள் அனைத்தும் பூரண தொற்று நீக்கம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக தரம் 11,12,13 வகுப்புக்களை சமூக இடைவெளியுடன் முதல் வாரத்தில் ஆரம்பிக்க முடியும்.  அதன் பின்னரே மற்றைய தரங்களை ஆரம்பிக்கலாம். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. அப்படியாயின், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கல்வி அமைச்சு தெளிவுபடுத்தவில்லை. ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டுமா? இல்லையா? என்பது பற்றி கல்வியமைச்சிடம் திட்டமில்லை. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பாடவேளைகள் இல்லாமல் வீணாக போக்குவரத்து செய்யும் அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேஸ், போன்ற இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொவிட் - 19 தொற்று மிகமோசமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் கல்வியமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும். 

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பிப்பதாகக் கல்வியமைச்சு கூறியுள்ளதைத் தவிர, பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக எந்தவிதமான திட்டமும் அவர்களிடம் இல்லாமல் ஆரம்பிப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக, எல்லோருடனும் கலந்துரையாடி சரியான தீர்மானமொன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும். எமக்குத் தெரிந்த அளவில், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசனைகள் பெறாமலேயே கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. 

பிள்ளைகளுடன் ஆசிரியர்கள் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பாடசாலை ஆரம்பித்தால், ஆசிரியர்கள் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் உள்ளோம்.  அதற்கு ஆசிரியர்களும் தயாராகவே உள்ளனர். ஆனால் பாடசாலைகள் சரியான திட்டத்துடன் முறையாக ஆரம்பிக்கப்படவேண்டும்.  கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், ஆசிரியர்களை அலுவலகங்களுக்குள் உள் நுழைய விடாது  பாதுகாப்பாக இருந்து வருகின்ற நிலையில், தொற்று நீக்கங்களும், சமூக இடைவெளிகளைப் பேணக்கூடிய திட்டங்களும் பாடசாலைகளில் உருவாக்கப்படாமல் ஆரம்பிப்பது, நாட்டுமக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும். எனவே, உடனடியாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானம் ஒன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றார்.


Saturday, November 14, 2020

யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையை புறக்கணித்துள்ளோம்: வடமாகாண கல்வியமைச்சு பாரிய விளைவுகளை சந்திக்கும்! - ஜோசப் ஸ்ராலின் -

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நிவர்த்திசெய்யப்படாத, பக்கச்சார்பான இடமாற்றங்கள் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையில் இலங்கை ஆசிரியர் சங்கம் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. 

கடந்த வருட இடமாற்றச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படாமல், ஒரு சில தனிப்பட்டவர்களின் தலையீடு காரணமாக தொடர்ந்தும் பக்கச்சார்பாகவே இடமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இடமாற்றச்சபை கூடுவது என்னும் போர்வையில் முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. 

இதன்; அடிப்படையிலேயே, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த இடமாற்றச் சபையைப் புறக்கணித்துள்ளது. ஆயினும், நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றி இடமாற்றச்சபை நடைபெற்றிருந்தது. இதன்மூலம் -; ‘முறைகேடுகளை தொடர்ச்சியாக ஆதரித்துவருகின்றோம்’ என்ற விடயத்தையே குறித்த இடமாற்றசபையில் கலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.  கடந்த வருட இடமாற்றச்சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி, முறைகேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, யாழ்.கல்வி வலயத்தில் எடுக்கப்படும் இடமாற்றத் தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. 

வெளிமாவட்டங்களிலிருந்து கடமையாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு மட்டுமே இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைக்கும் என்பதுடன், ஏனைய அனைத்து யாழ்.மாவட்ட இடமாற்றங்களுக்கும், கடந்த இடமாற்றசபை கூட்டத்தில் எடுத்திருந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்வரை ஒத்துழைக்கப்போவதில்லை. கல்வி அதிகாரிகள், தமக்கு சார்பானவர்களை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளும் முறைகேடுகளுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு எம்மைத் தள்ளி வருகின்றனர். 

கடந்த வருடம் யாழ்.கல்வி வலய இடமாற்றச்சபையில், எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்த முறைகேடுகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, மேன்முறையீட்டு சபையைக் கூட்டுவதாக, யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்திருந்தார். அவை எழுத்துமூலமாக அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆயினும், முறைகேடுகள் தீர்க்கப்படவுமில்லை, மேன்முறையீட்டு சபை கூட்டப்படவுமில்லை. 

வழங்கிய வாக்குறுதிகளுக்கமையவும், எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும், இத்தகைய முறைகேடுகள் நிவர்த்திசெய்தால் மட்டுமே நேற்றைய இடமாற்றச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வோம் என யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் எம்மால் தெரிவிக்கப்பட்டுமிருந்தது. குறித்த விடயம் கல்வியமைச்சின் செயலாளராலேயே தாமதமடைகின்றது என வலயக் கல்விப் பணிப்பாளரால் குறிப்பிடப்பட்டது. வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் மீதும், செயலாளர் வலயக்கல்விப் பணிப்பாளர் மீதும் மாறி மாறி பந்தை எறிந்து தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக, கல்விக் கட்டமைப்பில் முறைகேடுகளை உருவாக்கி வருகின்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒரு நீதி என செயற்படுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. குறித்த சில முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையைக் கூட மீறும் வகையிலேயே கல்வியமைச்சின் செயலாளரும், யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரும் செயற்பட்டு வருகின்றனர். 

வடமாகாண கல்வியமைச்சின் அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு சுயாதீன விசாரணைக்குழு அமைக்குமாறு தொடர்ச்சியாக நாம் வலியுறுத்திவரும் நிலையில், வடமாகாண ஆளுநர் இந்த முறைகேடுகளை நிவர்த்திசெய்ய எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

இந்த முறைகேடுகள் தீர்க்கப்படவில்லையாயின், வருடாந்த இடமாற்றங்களில் வடமாகாண கல்வியமைச்சு பாரிய விளைவுகளை சந்திக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 


Wednesday, November 11, 2020

வடமாகாண கல்வித்துறை மோசடிகள்: கல்வி அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும்! - இலங்கை ஆசிரியர் சங்கம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற பல மில்லியன் மோசடி தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் கல்வி அதிகாரிகளின் போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் கல்விப் புலத்தின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை அமைக்க ஆளுநரும் பிரதம செயலாளரும் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் தெரிவிக்கையில் - 

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற பல மில்லியன் மோசடி தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளே முழப்பொறுப்பேற்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் கல்வி அதிகாரிகளின் போக்காலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இவ்விடயம் கணக்காய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கல்வி அதிகாரிகளின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் வடமாகாண கல்விப் புலத்தில் புதிய விடயமல்ல. மாறாக, வரம்புக்கு மீறிய தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதாலேயே இவ்விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வடமாகாண கல்விப் புலத்தில் சீரான கணக்காய்வு மேற்கொண்டால் இன்னும் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளிவரும்.  

இதற்கு முன்னரும் கல்வித்துறைசார்ந்து பல இடங்களில் மோசடிகள் நடைபெற்றிருந்தது. இன்றும் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்களை வடமாகாண கல்வி அதிகாரிகள் காத்துவருவது தொடர்பாக, பல தரப்பினர்களிடம் முறையிட்டிருந்தோம். ஆயினும், அவர்களால், குறித்த அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும் கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டு எமக்கு பிரதியிடப்படும். மேலதிகமாக எவ்வித கரிசனையும் சம்பந்தப்பட்டவர்களால் எடுக்கப்பட்டிருக்கவில்லை. 

பிரபாலமான பாடசாலைகள் சிலவற்றின் நிதி மோசடிகள் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதாரங்களை கல்வியமைச்சுக்கு வழங்கியிருந்தது. இன்று வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பாக விசாரணைக்குழுவை அமைப்பதும் பின்னர் அதனை இழுத்தடிப்பதுமே வழக்கமாகவுள்ளது. 

மாறாக, கல்விப் புலத்தில் நடைபெறும் மோசடிகளையும், முறைகேடுகளையும் எதிர்த்து, அதனை வெளிக்கொண்டு வருபவர்களை, குழப்பவாதிகள் போல் சித்தரித்து அவர்களுக்கு இடமாற்றம் வழங்குவதே வடமாகாண கல்வி அதிகாரிகள் மேற்கொண்ட சாதனையாகவுள்ளது. 

முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பல லட்சங்கள் மோசடி செய்தமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தது. அவற்றுக்கு நடவடிக்கை எடுக்காது அதிகாரிகள் இருந்தபோது, இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய பல தொழிற்சங்கப் போராட்டங்களை செய்தே பணிப்பாளரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரமுடிந்திருந்தது.  விசாரணையின்போது அவரால் பண மோசடி உள்ளிட்ட பல  முறைகேடுகள் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டு, மோசடி செய்த பல லட்சம் ரூபா தொகை பணம், மீளளிப்பு செய்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் மடு வலய பணிப்பாளராக பதவிஉயர்வு வழங்கியிருந்தனர். 

ஒருவர் பணமோசடி செய்தால் மீளளிப்பு செய்வதன் மூலம் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலைமையே வடமாகாணத்தில் உள்ளது. அவர்களுக்கு உரிய வேளைகளில் பொருத்தமான இறுக்கமான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் அவை முன்னுதாரணமாக இருந்து இன்று பல மோசடிகளை தவிர்த்திருக்கும். 

வவுனியாவின் பிரபல பாடசாலையின் அதிபர் ஒருவரின் பல லட்சம் ரூபா மோசடிகள் நிரூபிக்கப்பட்டு, அவரால் பணம் மீளசெலுத்தப்பட்டுமிருந்தது. தண்டனையாக,  55 வயதுடன் குறித்த அதிபர், கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும் என்று பரிந்துரை அமைந்திருந்தது. ஆயினும், மனிதாபிமான அடிப்படை என்னும் போர்வையில், அவரை வேறொரு பாடசாலைக்கு அதிபராக நியமித்துள்ளனர்.  அங்கு இன்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பாடசாலைக்கு அருகாமையில் மதுவிற்பனை நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்த்துவந்த நிலையில், மதுவிற்பனை நிலையம் அமைக்க ஆட்சேபனை எதுவுமில்லை என கடிதம் வழங்கியவரும் குறித்த அதிபரேயாவார். இதற்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டே அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர். 

தீவகப் பிரதேசத்தின் பாடசாலையில், உளவியல் சீரற்ற அதிபர் ஒருவர் அடாவடியிலும், மோசடியிலும் ஈடுபட்டு ஆசிரியர்களை அச்சுறுத்திவருவதுடன், பாடசாலை சொத்துக்களை கையாடியிருந்தார். குறித்த அதிபர் பொருட்களை வெளியே எடுத்து சென்றதை கண்டித்திருந்த ஆசிரியருக்கு, புனைவான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி இடமாற்றம் வழங்கியிருந்தனர். குறித்த அதிபரின் கட்டட ஒப்பந்த மோசடி தொடர்பாக, ஒப்பந்தக்காரரால் காவல் துறையில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. இவற்றை அதிகாரிகளின் கவனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றபோது, ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்’ என்றே பதிலளிக்கப்பட்டிருந்தது. 

பல மோசடிக்காரர்கள் இன்று கல்விப் புலத்தில் கௌரவமாக நடமாடுவதற்கு வடமாகாண கல்வி அதிகாரிகளே அனுமதியளித்துள்ளனர். முறையற்ற வகையில் சட்ட வலுவற்ற விடுவிப்புக்களை வழங்கி, பல ஆசிரியர்களின் பணங்கள் மோசடி செய்யப்படுவதற்கு கல்வி அதிகாரிகள் இன்றும் துணைபுரிந்துவருகின்றனர். இவர்களின் துணையுடன் பாடசாலைகளில் ஒருபோதும் கடமையாற்றியிராதவர்களை, தொண்டர் ஆசிரியர் நியமனத்தின் மூலம் மோசடியாக உள்வாங்கியுள்ளனர். இவை அதிகாரிகளின் துணையின்றி ஒருபோதும் நடைபெற்றிருக்க முடியாது. இவ்வாறான முறைகேடுகள் ஏதோவொரு இலாப நோக்கம் கருதியே நடைபெற்றிருந்ததாக அறிய முடிகின்றது. இவ்விடயம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தும், இன்றுவரை மௌனமாகவே இருந்துவருகின்றனர்.  அவற்றை சீர்செய்ய எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், தகுதியற்றவர்கள் மூலம் கல்வி சீரழிவதற்கு அதிகாரிகளே துணைநிற்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். 

கடந்த வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் படி, வடமாகாண கல்வியமைச்சு முறையற்ற அதிபர் நியமனங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அதிபர் நியமனம் சீர்செய்யப்படாமலேயே மூடி மறைக்கப்பட்டது. இன்றுவரை சீர்செய்யப்படவில்லை. மாறாக, முறைகேடான வகையில், பாடசாலைக்கு நியமனம் பெற்ற அதிபரின் முறைகேடுகளுக்கும், ஏதேச்சதிகாரங்களுக்கும் அதிகாரிகள் துணைநிற்பதுடன் - முறைகேடுகளை எதிர்க்கும் ஆசிரியர்களுக்கு - இடமாற்றச்சபையின்றி தன்னிச்சையாக முறையற்ற இடமாற்றங்களை வடமாகாண அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இவ்வாறு பலரின் முறைகேடுகள் அதிகரிப்பதற்கு வடமாகாண அதிகாரிகளே தொடர்ச்சியாக துணைபோகின்றார்கள்.  

வடமாகாண கல்வி வலயங்களில், தகுதியற்ற பெறுபேறுகளுடன் முறைகேடான நியமனத்தினூடாக - ஆசிரியர்கள் என்னும் போர்வையில் - பலரை வடமாகாண கல்வி அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு உள்ள ஒருவர் தொடர்பாக, வடமாகாண கல்வி அதிகாரிகளுக்கு நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தபோது, அந்த அதிகாரி ‘இதுபோன்று பலர் இருக்கிறார்கள்’ என பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துமிருந்தார். அவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் நேரடியாகவே வலியுறுத்தியிருந்தபோதும், இன்று வரை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்டே வருகின்றார்கள்.  

அதிகாரிகள் சிலர் தமது சொத்துக்களை, தமது உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றி, கூறுவிலைகோரலில் மோசடிசெய்து, அரச நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கி உழைத்துவருகின்றனர். வியாபார நோக்கில் அனைத்தையும் சிந்திக்கும் சில அதிகாரிகள், வடமாகாண கல்வியையும் வியாபாரமாக்கி, வடமாகாண கல்வித்துறையை ஊழல்களும், மோசடிகளும், முறைகேடுகளும் நிறைந்த இடமாக இன்று மாற்றியுள்ளனர்.

பல மோசடிகள் நிறைந்துள்ள வடமாகாண கல்வித்துறையை சீரமைக்குமுகமாக, கல்வியமைச்சின் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குழு அமைக்குமாறு வடமாகாண பிரதம செயலரை இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டிருந்ததோடு, வடமாகாண ஆளுநருக்கும் பிரதியிட்டிருந்தது.  சாட்சியங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது. ஆயினும், எவ்வித நடவடிக்கைகளும் வடமாகாண பிரதமசெயலரோ அல்லது ஆளுநரோ எடுக்க முன்வராதமை மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். 

எனவே – கல்வியதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்கமாகத் தெரிவிப்பதோடு, அவ்விசாரணைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவிக்கின்றோம். 


 



Saturday, September 26, 2020

வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. 

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். 

 எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் -

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் - போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  "மனசாட்சியின்  படி செயற்படுதல்",  உறுப்புரை 14 "பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது" என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். 

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.


Tuesday, September 8, 2020

கிளிநொச்சி கல்வி வலய முறையற்ற இடமாற்றங்களை உடன் நிறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு



கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கமலராஜனால் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இடமாற்ற நடைமுறைகளை உதாசீனம் செய்து எதேச்சதிகாரமாக செயற்படுவரும் அவரது நடவடிக்கைகள் எல்லைமீறிச் செல்கின்றமையைச் சுட்டிக்காட்டியும் இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.


இந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கமலராஜனால் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இடமாற்ற நடைமுறைகளை உதாசீனம் செய்து எதேச்சதிகாரமாக செயற்படுவரும் அவரது நடவடிக்கைகள் எல்லைமீறிச் செல்கின்றமையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். 


28.08.2020 நடைபெற்ற இடமாற்றச்சபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட இடமாற்றங்களில் - இடமாற்றச்சபையால் நிராகரிக்கப்பட்டிருந்த இடமாற்றங்களை கூட, வலயக் கல்விப் பணிப்பாளர் தன்னிச்சையாக வழங்கியுள்ளமையானது –2007/20 தேசிய இடமாற்றக் கொள்கைகளை மீறிய சட்டவிரோதச் செயற்பாடுகளாகும். 


யாழ்.மாவட்டத்திலிருந்து – பல சிரமங்களுக்கு மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பல ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் - கிளிநொச்சி மாவட்டத்தை தமது சொந்த வதிவிடமாகக் கொண்டவர்களுக்கும் புதிதாக நியமனம் பெற்று, நியமன நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாதுள்ள சில ஆசிரியர்களுக்கும் - அவர்களுக்கு வசதியாக பாடசாலைகளை வழங்கும் செயற்பாடுகளையே கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பக்கச்சார்பான முறைகளிலும், முறையற்ற வழிமுறைகளினூடாகப் பின்றபற்றி வருகின்றார். 


எனவே – கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற இடமாற்றங்களை உடனடியாக நிறுத்துமாறும், 28.08.2020 நடைபெற்ற இடமாற்றச்சபையில் - இடமாற்றச் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையிலும், வலயக் கல்விப் பணிப்பாளரால் ஏதெச்சதிகாரமாக வழங்கப்பட்டிருந்த இடமாற்றங்களை நிறுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 30, 2020

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் நியமனத்தில் முறைகேடு – இலங்கை ஆசிரியர் சங்கம் தலையீடு



வேம்படி மகளிர் கல்லூரியில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேர்தல் கால அதிபர் நியமனம் தொடர்பாக – கல்வியமைச்சில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்புகொண்ட போது – தற்போது நியமிக்கப்பட்டவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவில்லை எனவும், நிர்வாக மேன்முறையீட்டு தீர்பாயத்தின் (AAT) பரிந்துரைக்கமைவாக பிரதி அதிபராகவே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும். நிர்வாக விடயங்களில் அவர் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னர் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டவரே அதிபராக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் - நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராலேயே இவரே அதிபர் எனக் அறிமுகப்படுத்தி முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக அறிய வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சை தொடர்பு கொண்ட போது - இந்த விடயத்தில் தலையிடுவதற்கு யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கல்வியமைச்சு இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கல்வியமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எழுத்து மூலமாக முறையிடவுள்ளது. 

Friday, July 24, 2020

கலாநிதி குருபரனின் பதவி விலகல் தொடர்பாக இ.ஆ.சங்கம், ப.மா.ஆணைக்குழுவுக்கு கடிதம்.

கலாநிதி குமாரவடிவேல் குருபரன், காணாமல் போனோர் தொடர்பான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழக்கில் சம்பந்தப்பட்டமைக்காக - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவசியமற்ற  அழுத்தத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்துக்கு ஏற்படுத்தியமை தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களின் சுயாதீன தன்மையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை 2011 இலிருந்து அவரை நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்த நிலையில் - இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அவசியமற்ற தலையீடு கவலையளிக்கிறது.

தாம் பணியாற்றும் துறைசார்ந்து, அதனை விருத்தி செய்யும் பொருட்டு, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தமது துறைசார் அனுபவத்துக்காகச் செயற்படுவது சாதாரணவிடயமாகும். அதன் அடிப்படையில் ஏனைய பல்கலைகலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை உண்டு.

காணாமால் போனோர் தொடர்பான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வடக்குப் பகுதியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சமூக வேண்டுகோளாகும்.

இந்த நிலையில் - தனது சட்டப் புலமை மூலம் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு கலாநிதி குமாரவடிவேல் குமரகுருபரன் சட்டத்தரணியாக செயற்பட முன்வந்திருந்தமை வரவேற்கக்கூடிய செயற்பாடாகும்.

இதற்காக முன்னர் எந்தவகையான தடையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விதித்திருக்கவில்லை. யாழ்.பல்கலைக்கழகப் பேரவை தனது சுயாதீனத்தன்மையின் அடிப்படையில் 2011 முதல் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது பேரவையின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டத்துறையில் புலமைவாய்ந்த கலாநிதி குருபரனை பல்கலைக்கழக செயற்பாட்டிலிருந்து விலகவைப்பதானது, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இவ்விடயம் தொடர்பாக, ஆராய்ந்து, பொருத்தமான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

Saturday, July 4, 2020

இடர் நிலையை கவனத்தில் கொள்ளாது, சுற்றுநிருபத்தை மீறும் கல்வி அதிகாரிகள்: பிரஜைகளின் வாழும் உரிமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது! - ஜோசப் ஸ்ராலின் -


கொரோனா ஆபத்துக்களை தவிர்த்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக -  கல்வியமைச்சின் ED/01/12/06/05/01 இலக்க சுற்றுநிருபம் -ஆசிரியர்களின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் - தடையற்ற கல்வியையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இச் சுற்று நிருபத்தில், ஒவ்வொரு ஆசிரியரும் தனது முதல் பாடவேளை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளித்தால் போதுமானது எனவும் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும். எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் - கல்விசார் ஊழியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை தொடர்பாக பொது 18 ஆவணம் அல்லாமல், அதன் மாதிரியான தனியான ஆவணமொன்றையே பேணுமாறும் சுற்றுநிருபம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை - எதிர்வரும் நாட்களில் பகுதிபகுதியாகவே வகுப்புப் பிரிவுகள் ஆரம்பமாக உள்ளன. பாடவேளைகள் இல்லாத ஆசிரியர்களையும் காலை 7.30 மணி முதல் பாடசாலை நிறைவடையும் வரை மறித்து வைப்பதும் - சுற்றுநிருபத்தில் கூறப்படாததும் சுகாதார பரிசோதகர்களால் பரிந்துரைக்கப்படாததுமான விரலடையாள இயந்திர பதிவு முறைகளை திணிக்க முயற்சிப்பதும், ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாத அதிகாரிகளின் வன்மம் கொண்ட செயற்பாடாகும்.

ஆசிரியர்களினதும் சமூகத்தினதும் பாதுகாப்பு தொடர்பில் கிஞ்சித்தும் சிந்திக்காத கல்வி நிர்வாக அதிகாரிகள், கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு மாறாக, வக்கிர எண்ணத்துடன் செயற்பட முயல்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கொவிட் -19 நோயின் தாக்கமானது சிறுவர்களை விட பெரியவர்களையே அதிகளவில் பாதித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூர இடங்கள் பயணம் செய்து பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் பாடசாலைகளில் ஆட்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றினூடாக -  அவசியமான  சந்தர்பங்களில் மட்டும் செயற்பட்டு -  சமூக இடைவெளியைப் பேணி – மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கொவிட் -19 நோயின் ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தமுடியும்.

கொவிட் -19 தாக்கத்திலிருந்து முற்றாக விடுபடுவதற்கான செயற்பாடுகள் நாடுதளுவிய ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில் - சமூக இடைவெளியை இயலுமான வரையில் பேணும் முகமாகவே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வியமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபமும் இவற்றைக் கவனெடுத்திலெடுத்தே வெளியிடப்பட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

பல நாடுகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே நோயின் தாக்கமும் அதிகரித்திருந்தது. ஆயினும் இங்குள்ள கல்வி நிர்வாகிகள் - மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்குக் கட்டுப்படாமலும், ஆசிரியர்களின் பாதுகாப்பில் அக்கறைகொள்ளாமலும், இந்த இடர்கால நிலையை கருத்திலெடுக்காமலும் செயற்படுவதானது, மிக ஆபத்தான கட்டத்துக்கு இந்த நாட்டைக் கொண்டுசெல்லும்.

சுற்றுநிருபங்கள் கூறும் அறிவுறுத்தல்களைத் தவிர்த்து - தான்தோன்றித்தனமாக - ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பாதுகாப்பில் கவனம் செலுத்தாத கல்வி அதிகாரிகளின் கீழ்தர மன நிலையால் - முழு நாடும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலையே ஏற்படவுள்ளது. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சும் உடன் தலையிடவேண்டும்.

இடர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் செயற்படும் கல்வி நிர்வாகிகளின் சமூகப் பொறுப்பற்ற அணுகுமுறையால் - பிரசைகளின் உயிர்வாழும் உரிமைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்

Monday, June 8, 2020

பாதுகாப்புப் படையினரை மட்டுமே கொண்ட ஜனாதிபதி செயலணி பொதுச்சேவையின் சுதந்திரத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும் - ஜோசப் ஸ்ராலின் -


பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலம்கொண்ட, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவென உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஜனாதிபதி செயலணி ஆனது  பொதுச்சேவையின் சுதந்திரத்திற்கு ஓர்  அச்சுறுத்தல் ஆகும் எனவும் மேற்கண்ட செயற்குழுவின் பிரதிநிதித்துவத்தினைப் பற்றி கவனம் செலுத்துமாறும் பொதுச் சேவையின் சுதந்திரத்தில் பணிக்குழு தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையின் தபால் மற்றும்தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம், மாகாண பொது மேலாண்மைசேவைகள் சங்கம் ஆகியன ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 
2020 ஜூன் 02 ம் திகதி, இலக்கம் 2178/18 கொண்ட அதிவிசேடவர்த்தமானி அறிவிப்பு மூலம் ஜனாதிபதியின் ஊடாக பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலம்கொண்ட, சட்டத்தைமதிக்கும் சமூகமொன்றை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது 13 உறுப்பினரகள் அடங்கிய இப்பணிக்குழுவில் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவ்வித  சிவில் உறுப்பினர்களும்  நியமிக்கப்படவில்லை.
அவர்களால் செய்யப்பட வேண்டிய பணிகளில் முதன்மையானது, தற்பொழுது நாட்டின் பல இடங்களில் சுதந்திரமாகவும், அமைதியான,சமூகநிலைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மேலோங்கியுள்ளசட்டத்தை மீறி தவறுகள் இழைக்கும் “சமூகக்குழுக்களின்”சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு தேவையான துரிதநடவடிக்கைகளை எடுப்பதாகும். 

இதில் ''சமூகக் குழுக்கள்'' என்ற பதத்திற்கு   தெளிவான வரையறை ஒன்று வழங்கப்படாமல், இதனைஅடிப்படையாகக்கொண்டு , சில சில  பிரச்சினைகளுக்காக- ஜனநாயக உரிமைகளுக்காக  எதிர்க்கும் குழுக்களையும் கூட அர்த்தப்படுத்த முடியும். 

அப்படியானால் - இது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.

மற்றும் - தற்பொழுதுமுதல் இப்பணிக்குழுவானது அரசாங்கத்தை விமர்சிக்கும் குழுக்களுக்கு எதிராகவும் விழிப்புடன் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி  வர்த்தமானி மூலம் குறிப்பிடப்படும் 
“பாதுகாப்பான நாடொன்றை ஒழுக்கநெறியுள்ள குணநலம்கொண்ட சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியினால் ஆலோசனைகள் வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக ஒத்துழைப்பினை கோரக்கூடிய சகல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அத்தகைய ஏனைய நபார்களினால் அப்பணி தொடர்பாக உரியவாறு பின்பற்றக்கூடிய ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டுமெனவும் வழங்கக்கூடிய சகல உதவிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெனவும் சகல தகவல்களையும் வழங்க வேண்டுமெனவும் நான் இத்தால் மூலம் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் கட்டளையிட்டு பணிப்புரை விடுக்கின்றேன்” 
என்ற வாசகத்தின் மூலம் அரச
பொதுச்சேவையானது முற்றிலும் இப்பணிக்குழுவின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 அதேபோன்று மேற்படி செயற்குழு மூலம்வழங்கப்படும் ஆலோசனைகள் எவ்வாறானது?  எதிர்பார்க்கப்படும் உதவிகள், தகவல்கள்   எப்படியானது ?என்று விளக்கமளிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில்  - அரச பொதுசேவைக்கு ஒரு சர்வாதிகார சக்தி திணிக்கப்படுகிறது. 
பொது சேவையின் நிர்வாகம்  அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது. 
விதிகள், கட்டளைகள் மற்றும் சுற்றறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்ற து.
ஆனால் - அதற்கு மேலதிகமாக - முழுமையாக பாதுகாப்பு  படையினரின்அங்கத்தவர்களைக் கொண்ட  இந்த செயற்குழுவிற்கு , பொதுசேவையின் மீது வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது பொது சேவையின்சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.
இந்த நிலைமையில்  மேற்கண்ட செயற்குழுவின் பிரதிநிதித்துவத்தினைப் பற்றி கவனம் செலுத்துமாறும் பொதுச் சேவையின் சுதந்திரத்தில் பணிக்குழு தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியின் செயலாளரைக் கோருகிறது.
இப்படிக்கு,
ஜோசப் ஸ்டாலின் -  பொதுச் செயலாளர் -  இலங்கை ஆசிரியர் சங்கம்
சிந்திக்க பண்டார -  தலைவர் - இலங்கையின் தபால் மற்றும்தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம்
விஜித பிரேமரத்தனே  -  செயலாளர் - மாகாண பொது மேலாண்மைசேவைகள் சங்கம்

Saturday, May 16, 2020

கல்வியமைச்சின் அனுமதியின்றி – கிழக்கில் பாடசாலைகள் நடாத்தமுடியாது: கல்வியமைச்சர் – ஜோசப் ஸ்ராலினிடம் தெரிவிப்பு!


சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக - சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் - கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக -கிழக்கு மாகாண பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை மே 18 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள் உரியமுறையில் தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும்.  முகக் கவசங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் கடைப்பிடிப்பதற்குரிய ஏற்பாடுகளுக்கான நிதி விடயங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குரிய  பொறிமுறைகளை கல்வியமைச்சு உருவாக்க வேண்டும்.  இவ்வாறாக - சுகாராப் பிரிவினரின் அனுமதியும் பெறப்படவேண்டும்.

இவை தொடர்பாக  கரிசனைகொள்ளாமல் - கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எடுக்கும் முயற்சிகளானது – மாணவர்களுக்கு நோய்த் தொற்றை அதிகரிக்கச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கம் -  கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆயினும் - சில தேசிய பாடசாலைகளிலும் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயங்கள் தொடர்பாக – கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமாளுடனும் - தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளருடனும்- இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தனித்தனியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது - சுகாரதர சேவைகள் அமைச்சின் பரிந்துரையின்றி – எந்தப் பாடசாலைகளும் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வியமைச்சர் குறிப்பிட்டதுடன்–  இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை – தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கிட்சிறி லியனகம அவர்களும் - கல்வியமைச்சின் அனுமதியின்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தவறான விடயம் எனவும்-  உடனடியாக கவனத்துக்கு எடுத்து செயற்படுவதாகவும் - தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, May 12, 2020

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி சம்பளத்தொகை அறவிடமுடியாது! -ஜோசப் ஸ்ராலின் -


 கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக - ஒரு நாள் சம்பளத்தை - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம்  தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் - கிழக்கு மாகாணத்திலும் - அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தினைப் பெறுவதற்கு – அதிகாரிகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி கழிக்க முடியாது என்பதை -– கிழக்கு மாகாண ஆளுநருக்குக் கடிதம் மூலம் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை - கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பெறுவது தொடர்பாக - கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரினால் - கிழக்கு மாகாணத்தின் அனைத்து செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் கீழ் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் - அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் - "அனைத்து ஆசியர்களிடமும் அறவிடுவது குறித்து அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு" குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் மூலம் - அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி -அதிகாரிகளின் அழுத்தங்கள் மூலமாக – அடிபணிய வைக்கும் முயற்சிகளே நடைபெறுகின்றன.

எனவே – அதிபர், ஆசிரியர்களின் சம்மதிமின்றி – ஒரு நாள் சம்பளமோ, அல்லது ஒருமாத சம்பளங்களோ கழிப்பது தொடர்பான - அதிகாரிகளின் எவ்வித அழுத்தங்கள் ஏற்பட்டாலும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவருமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.



Friday, May 8, 2020

மே மாதச் சம்பளத்தை வழங்க முடியாது. அழுத்தங்களுக்கு அடிபணியத்தேவையில்லை! - ஜோசப் ஸ்ராலின் -

கோவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து- இலங்கை அரசு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிப்பதற்கு எனக் கூறி - குறைந்த ஊதியங்கள் பெறும் அரச ஊழியர்களிடம் அவர்களின் மே மாதச் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது முறையற்றது என்று - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.; 
இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் - 
கடன்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற - கடுமையான நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களின் ஏப்ரல் மற்றும் மே மாதக் கடன் தவணைகளை செலுத்த வேண்டாம் என்ற முடிவு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தம் கூட - அந்த சலுகை - ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பாக - ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பல அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பண்டிகைக் கால முற்பணங்களும் பலருக்குக் கிடைக்கவில்லை. அதிகமான வெளிநாட்டு உதவிகள் தற்போது அரசுக்கு கிடைப்பதுடன் - கச்சாய் எண்ணையின் விலை குறைவாகக் கிடைக்கும் தற்போதைய நிலையிலும் கூட இந்த அரசு எரிபொருள் விலைகளைக் குறைக்காமல் – அதிக விலைக்கே விற்றுவருகின்றது. 
இதுபோன்ற நிலையில் - ஜனாதிபதியின் செயலாளரின், அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தைக் கோரும்   கோரிக்கை நியாயமற்றதாகும். இதற்கு எவரும் அடிபணியத் தேவையில்லை. 
ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தரா - 2020 மே 5 திகதியிட்ட ஒரு கடிதத்தின் மூலம், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களும் - தங்கள் சம்பளத்தை அரசாங்க செலவினங்களுக்காக - நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதமானது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது. அதில் “நான் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கிறேன். நீங்களும் உங்கள் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த ஊக்குவிப்புக்கள் - அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவதிலேயே எப்படி அமைந்திருந்தது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் நன்கு அறிவோம். பலர் - அதிகாரிகளின் அழுத்தங்களுக்குப் பயந்து தமது சம்பளத்தை வழங்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது அரச ஊழியர்களை பாதிப்படையச் செய்யும் அநீதியான செயற்பாடாகும். அதுமட்டுமல்லாமல் - இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை – தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு முறைகேடாகவும் - ஜனாதிபதியின் செயலாளர் பயன்படுத்தியுள்ளார்.
கோவிட் 19 நோய்த்தொற்றைக் காரணமாக காட்டி - அனைத்து அரசு ஊழியர்களின் மே சம்பளத்தை நன்கொடையாகக் கோரிநிற்கும் - அரசின் இத்தகைய முறையற்ற கோரிக்கையானது - ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டம் - தபால், ரயில்வே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிற பொது சேவைகளின் சம்பள போராட்டங்கள் - எதிர்காலங்களில் தோன்றுவதைத் தடுப்பதற்கான அரசின் தந்திரோபாயமா? என்பதே நமக்கு முன்னுள்ள கேள்வியாகும். 
அரச ஊழியர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கான ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையானது - கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அதிபர், ஆசிரியர்-களின் சம்பள உயர்வு போராட்டத்தைக் கூடப் பாதித்துள்ளது. 
வெளிநாட்டு உதவிகள் தாராளமாகப் பெறப்பட்டு – எரிபொருள் மூலமும் இலாபமீட்டிக்கொண்டு - அரச ஊழியர்களின் சம்பளத்தை - அரசு கோரிநிற்பதானது – “நிதி நெருக்கடி” என்று பாசாங்கு செய்வதான அரசாங்கத்தின் முயற்சி என்றே எமக்கு வலுவான சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமல்லாமல் - தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் - இ;வ்வாறு பெறப்படும் நிதிகள் - தனிப்பட்ட நபர்களின் பைகளை நிரப்பும் அபாயகரமான சூழலும் உள்ளது.
உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் - ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தை நியாயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்திருக்கிறாh.; இதனை அரச ஊழியர்களின் அன்பளிப்பு எனவும் கூறியிருக்கிறார். இதே உயர்கல்வி அமைச்சர் தான் - ஒரு குடும்பம் வாழ்வதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா (2500/-) போதுமானது எனவும் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்தவராவார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  
இவர்களின் - இந்தக்கோரிக்கை மிகவும் அநீதியானது என்பதுடன் - இதன்மூலம் அரச நிறுவனங்களின் தலைவர்கள் - ஊழியர்களின் ஊதியங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தங்களை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் நாம் அறிவோம். இதனை இலங்கை அசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இத்தகைய அழுத்தங்களுக்கு – அதிபர், ஆசிரியர்கள் அடிபணியத்தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 
என்று ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

Wednesday, May 6, 2020

பழிவாங்க முயலும் செயற்பாடுகளை- துணுக்காய் வலய பணிப்பாளர் நிறுத்தவேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -


துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் - கொவிட் -19 நிதிக்காக - ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவது தொடர்பாக - சம்மதத்துக்கான கையொப்பம் பெறும் கடிதத்துடன் - கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் - ''இப்படிவம் சமர்ப்பிக்காத பாடசாலைகளுக்கு மே மாத சம்பளப் பட்டியல் வழங்கப்படமாட்டாது'' என எழுத்துமூலம் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு குறிப்பிட்டமை - ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் - நிதிப் பிரமாண நடைமுறைகளுக்கும் முரணானதாகும்.

இவ்விடயம் தொடர்பாக - எமது துணுக்காய் கல்வி வலயத்தின் செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டு - அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் - எமது துணுக்காய் வலய செயலாளரை - தொலைபேசிமூலம் அச்சுறுத்தியதோடு - பழிவாங்க முயலும் செயற்பாடுகளிலும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஈடுபட்டுள்ளமை - ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தையும்,
தொழிற்சங்க உரிமைகளை நசுக்கமுயலும் - மிகமோசமான செயற்பாடாகும்.

தமது சம்பளங்களில் - முறையற்ற விதமாக அதிகாரிகள் கைவைக்க முயலும்போது - ஆசிரியர்கள் மௌனிகளாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் செயற்பட முனையும் - துணுக்காய் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.

எமது சங்கத்தின் செயலாளரை பழிவாங்கும் செயற்பாடுகளில் - துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் ஈடுபடுவாராயின் - தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாததாக அமையும் என - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, May 5, 2020

இ.ஆ.சங்கத்தின் தலையீட்டால் மீளளிப்பு செய்யப்பட்ட EDCS கடன்தொகை!


கொரோனா நெருக்கடி நிலை காரணமாக - வங்கிகளில் பெறப்பட்ட சிறு கடன்தொகைகளுக்கான சலுகைகள் வழங்குமாறு அரசு அறிவித்திருந்தது.
 மத்தியவங்கியின் தாமதமான அறிவுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்பட்ட சம்பளங்களிலிருந்தும் - வங்கிகள் கடன் தொகையை அறவிட்டிருந்தன.

இந்நிலையில் - ஆசிரியர்களை அதிகமான அங்கத்தவர்களாக கொண்டு இயங்கும் கல்வி அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும் <EDCS> கடன்தொகைகளை அறவிட்டிருந்தது.

ஏப்ரல் மாதச் சம்பளத்திலிருந்து கழித்த கடன் தொகையை மீள செலுத்துவதாக ஏப்ரல் 23 ஆம் திகதி -  நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் ஆசிரியர்களிடமிருந்து படிவங்களைப் பெற்றிருந்து.
ஆயினும் - இன்றுவரை கழித்த தொகை ஆசிரியர்களின் கணக்கில் மீளளிப்பு செய்யப்படாமல் இருந்துள்ளது.



ஆயினும் - ஒரு சிலருக்கு மட்டும் - மீளளிக்கப்பட்டுள்ளதாகவும் - அந்த மீளளிப்புக்கு நுவரெலியா மாவட்ட  EDCS இல் பணியாற்றுபவர்களும், EDCS தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களும் - ஆசிரியர் சிலரிடம் சிறு தொகைப்பணம் பெற்று - அவர்களுக்கு மீளளிப்பு செய்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டிருந்தனர்.

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரச்செல்வன் உட்பட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் -பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக சென்று  -நுவரெலியா மாவட்ட  EDCS நிர்வாகத்துடன் கலந்துரையாடினர். விவாதங்களினையடுத்து - உடனடியாகவே ஆசிரியர்களின் பணத்தை நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் மீளளிப்புச்செய்துள்ளதோடு.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையையடுத்து மீளளிப்புச் செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


Friday, May 1, 2020

இ.ஆ.சங்கம் ,யாழ். ப.ஊ.சங்கத்தினரின் மே தினச் செய்திகள் - 2020


இலங்கை ஆசிரியர் சங்கமும் அதன் தோழமைச்சக்திகளான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல காலமாக சர்வதேச தொழிலாளர் தினத்தை தொடர்ச்சியாக கொண்டாடிவந்துள்ளது.

கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளான  இலங்கை ஆசிரியர் சங்கம்,  புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் போன்றவர்களினதும் - வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

மே தினச்செய்தி - 2020
இலங்கை ஆசிரியர் சங்கம்

அன்பான தோழர்களே!

''தொழிலாளர்களாக ஒன்றுபடுவோம் '' என்னும் தொனிப்பொருளில் வழமையாக சர்வதேச மே தினத்தில் ஒன்றிணையும் தொழிலாளர்களாகிய நாம் - கொவிட்-19 நோய்த்தொற்றின் உலகளாவிய நெருக்கடியின் மூலம் ஒன்றுபடமுடியாத சூழலில் உள்ளோம்.

இலங்கையின் - இன்றைய இந்தச் சூழல்  - இலவசக் கல்வியையும் இலவச சகாதாரத்துறையையும் - தொழிற்சங்கங்கள் பாதுகாத்ததன் விளைவை - அனுபவரீதியாக அனைவரையும் உணரவைத்துள்ளது.

உலக வரைபடத்தில் - வெற்றியடைந்ததாகக் கருதிய - முதலாளித்துவ வல்லரசு நாடுகள் - சுகாதாரத்துறையையும், கல்வித்துறையையும் தனியார் மயமாக்கியதன் விளைவால் - மீளச்சிரமப்படும் பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கை அரசு - 'சைட்டம்' முறைமை மூலம் - இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் - தனியார் மயப்படுத்தி நசுக்க முற்பட்டவேளை - அதனை எதிர்த்துப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்கொண்டு சென்றதன் விளைவாலேயே -  இலவச சுகாதாரமும், இலவச கல்வியும் - இன்றும் மக்களைப் பாதுகாத்துவருகிறது. 

ஆயினும் - சுதந்திரமான கல்விக்கானதும் சுகாதாரத்துறைக்கானதுமான போராட்டம் இன்னும் முழுமைபெறவில்லை.

யுனஸ்கோவின் அறிக்கையிடலின் அடிப்படையில் - கொவிட் -19 பிரச்சினையால் உலகளவில் 1.7 பில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தரவுகள் 1.5 பில்லியன் வேலையிழப்புகள் உலகளவில் காணப்படுவதாக குறிப்பிடுகிறது.

இந்நிலையில் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது? என்று சிந்திக்கும் பொறுப்பு எம் அனைவர்மேலும் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயினும் - இலங்கை கல்வித்துறையில் - மே-11 பாடசாலை ஆரம்பிக்கும் என ஏப்ரல் -11 இலேயே தீர்மானித்திருந்தார்கள். ஏப்ரல் -11 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 197 ஆக மட்டுமே இருந்தது. மே-1 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 600 ஐ தாண்டியிருக்கிறது.

அவ்வாறாயின் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது என்று இன்றைய அரசு  பொறுப்புடன் செயற்படுகிறதா?

பாடசாலைப் பிள்ளைகளின் பாதுகாப்பைப் புறம்தள்ளி - வெறும் தேர்தலை நோக்காகக்கொண்டே இந்த அரசு செயற்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல்- 
கொரோனா கல்விப் பாதிப்பு தொடர்பாக - தற்போது உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் - தனியார் பாடசாலை உரிமையாளர் ஒருவர் உட்பட தனியார் பாடசாலைகளின் இரண்டு அதிபர்களுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இலவசக் கல்வி தொடர்பாக இந்த அரசின் அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. இதற்கு தொழிற்சங்கமாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் - சிறு தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் எனப் பலதரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான ஒரு அவசரத்தீர்வும் அவசியமானதாகும்.

நோய்த்தொற்று என்பது - மனிதருக்கு தெரிந்தே வருவதில்லை. ஆனாலும் நோயாளிகளை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்யும் செயற்பாடுகள் உருவாகி வருவது தவிர்க்கப்படவேண்டும். கொரோனா நோய்த்தொற்றைக் காரணமாகக்கொண்டு - அடிப்படை வாதங்களையும் - இனவாதங்களையும் தூண்டும் அரசின் நோக்கம் தோற்கடிக்கப்படவேண்டும்.

எனவே - இக்கட்டான இந்த சூழலிலிருந்து - உலக தொழிலாளர்கள் மீண்டுவரவும் - இலங்கையில் - கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் இலவசமாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி - நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என - இன்றைய மே தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

மே தினச் செய்தி - 2020
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.

2020 மே தின அறைகூவல்: ஊழிக்கால பேரபாயம் - 
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எச்சரிக்கை. 


தோழர்களே!
கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளதும் வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1. இந்த ஊரடங்கும் சுய தனிமைப்படுத்தலும் அவசியமானதெனினும் இது தொழிலாளிகளுக்கு இச் சூழ்நிலையில் மிக அவசியமான கருத்துப் பரிமாறலுக்கான மிகவும் முக்கியமான சாதனமாக இருந்த ஒன்று கூடலை இல்லாதாக்கியுள்ளது. தொழிலாளர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இயலாததாகியுள்ளது.

2.வதந்திகளிடமிருந்து உண்மைகளை பிரித்தறிவதற்கோ, கண்டறிந்த உண்மைகளை வெளிக்கொணருவதற்கோ முடியாத நிலை  காணப்படுகிறது.

3.அமெரிக்காவிலும், ஆபிரிக்க நாடுகளிலும் மட்டுமன்றி இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் கூட நலிவுற்ற தரப்பினரும் நாளாந்த வேதனத் தொழிலாளர்களும் "பரிசோதனை எலிகளாக" தங்களையறியாமலே மாறும் அபாயத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

4. அரசாங்களின் தற்காலிக நிவாரணங்கள் உரிய மக்களுக்கு சென்றடைவதற்கு அரச அதிகாரிகள்,வங்கிகள் போன்ற அரச இயந்திரங்களே தடையாக உள்ளமையை இலங்கையில் காண்கிறோம்.

5.மேலும் குறுகிய அரசியல் நோக்குடையதாக  விமர்சிக்கப்படும் அரசாங்க கடன் சலுகை நிவாரணங்கள் நீண்ட காலத்தில் கடனாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்ற வாதம் இதுவரை மறுத்துரைக்கப்படவில்லை.

6.முறைசாரா தொழிலாளர்களதும் நிரந்தரமற்ற பணிகளில் நாளாந்த வேதனம் பெறுவோரினதும் வேலையிழக்கும் நிலைமைக்கு உடனடி நிவர்த்தியையோ அல்லது நிவாரணங்களையோ வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்களுக்கு உள்ளது.அதிலிருந்து அவை விலகிவிடமுடியாது என்பதை தொழிற்சங்கங்கள் இடித்துரைக்கப்படவேண்டும்

7.ஆட்சியாளர்களும்,அதிகார தரப்பினரும் தமக்கு இயைந்த வகையில் தாம் தீர்மானித்த நேரத்தில்,தீர்மானித்த இடத்தில்,தீர்மானித்த தரப்பினருக்கு மட்டும்  தமது திட்டங்களை விளக்கி அங்கீகாரம் பெறுவதற்கு இன்றைய சூழல் இடமளிக்கிறது.

8.இன்றைய சூழலில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை/சமுகத்திற்கு ஏற்படக்கூடியஅபாயங்களை/ஊழல்களை சுட்டிக் காட்டும் மிகச் சிலரின் குரல்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

9.இன்றைய சூழலில் தவிர்க்க முடியாமல் உருவான மிகச்சில நல்ல விளைவுகளான சுய உற்பத்தி,கிராம  தன்னிறைவு விவசாயம், இயற்கை விவசாய முயற்சிகள் போன்றன நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிய பின்னான காலத்திலும் தொடர்ந்து நிலைபெற ஆகவேண்டியதைச் செய்யாவிட்டால் முதலாளித்துவ சக்திகளால் இவை திட்டமிட்டே அழிக்கப்படும்.

கடந்த காலங்களில் இந்திய படைகளின் போர்க் காலங்களிலும், 1995 மாபெரும் இடப்பெயர்விலும்,சுனாமி மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலங்களிலும்" படம்" காட்டியவர்களை நீங்கள் அறிவீர்கள். இப்போதும் அவ்வாறானவர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.

இதனால் தான் தோழர்களே , நாம் மிகவும் அவசியமாக, அவசரமாக கலந்துரையாட வேண்டியுள்ளது.

இந்த அவசர கலந்துரையாடலை நாம் செய்யத் தவறின்,இவ்விடர் காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிற்காலத்தில் பயன்படுத்த தவறியவர்களாவோம்

அதுமட்டுமின்றி பல்வேறு பிற்போக்கு சக்திகளும் சுயநலபேர்வழிகளும் இக் காலத்துக்கு பின்வரும் காலத்தை  பொதுநலனுக்காகவன்றி தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த போகும் கொடுமையை பார்த்தும் வாளாவிருப்பவர்களாவோம்.

ஆகவே தோழர்களே,சோர்விலிருந்து மீண்டெழுவோம்.ஒன்று சேருவோம்.இன்றே!இப்போதே!

Thursday, April 30, 2020

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சம்பளம் நிறுத்தும் அதிகாரத்தை வழங்கியது யார் ? இ.ஆ.சங்கம் கேள்வி!

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களுக்கு Np/44/20/2/3/FA/GENERAL இலக்க கடிதத்தின் மூலமாக - தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனம் செலுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் கல்வி வலய செயலாளர் இந்திரபாலன் மேலும் தெரிவிக்கையில் -

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி - ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக - அறவிடமுடியாது என ஏற்கனவே - இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சுக்கும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் - ஒரு நாள் சம்பளத்தை ஆசிரியர்களிடம் அறவிடுவதற்கு - சம்மதக் கடிதத்தை அதிபர், ஆசிரியர்களிடமிருந்து பெற்று வழங்காவிட்டால் - மே மாத சம்பளப் பட்டியல் அனுப்பப்படமாட்டாது என துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமையானது - மிகுந்த கண்டனத்துக்குரிய விடயமாகும்.

அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பளத்தில் - நிதி வழங்குவது தொடர்பாக அவர்கள்தான் தீர்மானிக்கமுடியுமேயன்றி - வேறெவரும் தீர்மானிக்கமுடியாது. அச்சுறுத்திப் பெற முயற்சிக்கவும் கூடாது.

சம்மதம் தெரிவிக்க விரும்பாத அதிபர், ஆசிரியர்கள் - விருப்பமின்மை தொடர்பாக - கடிதம் வழங்கவேண்டிய எந்தவிதமான அவசியமுமில்லை. அவர்களை கடிதத்தைக்கோரி வற்புறுத்தவும் முடியாது.

அதற்காக - அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காமல் நிறுத்துவதற்கு துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியது யார் ?

இத்தகைய அச்சுறுத்தும் செயற்பாடுகளை கல்விப்புலம் சார் தரப்புகள் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

எனத் தெரிவித்தார்.

Monday, April 27, 2020

தற்போதுள்ள அச்சமான சூழலில் - இராணுவத்தினருக்கு பாடசாலைகளை வழங்கமுடியாது. – ஜோசப் ஸ்ராலின் -

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் - ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை - இராணுவத்தினர் சில தேவைகளுக்கு - இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட – தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் - இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து - கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனவே - இந்த அச்சமான சூழ்நிலையில் - தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் - பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே - மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகிள்ளது.

இந்தச் சூழலில் - பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையூம் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும். நாடுபூராகவும் 43 லட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில் - பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் செறிவு நிறைந்த இடங்களிலமைந்த பாடசாலைகள் - மற்றும் நிறுவனங்களில் - இத்தகைய தனிமைப்படுத்தல் நிலைகளை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக – வடக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் - வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் - பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு – கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

''தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் - இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும்.

அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் – பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 15, 2020

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் சம்பளத்தை அறவிடமுடியாது - ஜோசப் ஸ்ராலின்

கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதெனும் போர்வையில் - அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் வேதனத்தை கழிப்பதற்காக - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் 10.04.2020 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் வேதனத்தை - திணைக்களங்கள் அறவிடமுடியாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. தற்போது நிலவும் - இக்கட்டான சூழ்நிலையில் - அதிபர், ஆசிரியர்கள் பலர் தாமாக முன்வந்து - தமது நிதிப்பங்களிப்புகள் மூலமாக - பல நலத்திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாகவும், சமூக அமைப்புகள் ஊடாகவும், தனித்தனியாகவும் முன்னெடுத்து வருகிறார்கள். ஊரடங்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் - அன்றாடம் உழைத்து வாழ்ந்தவர்கள் - பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்தான சூழலில் இருந்தபோது - அரசு பாராமுகமாக இருந்தது. இன்றும்கூட -அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளும், உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையவில்லை என்னும் குற்றச்சாட்டு நீங்கவில்லை. இந்த சூழலில் - அதிபர், ஆசிரியர்களின் கணிசமான நிதிப்பங்களிப்புகளைப்பெற்று - இலங்கை ஆசிரியர் சங்கமும் மனிதாபிமான உதவிகளை கணிசமான அளவில் செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் - தனிப்பட்டமுறையில் பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கூட - தமது பாடசாலை மாணவர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். இதுவரை அவ்வாறு செய்யாதவர்களைக் கூட - பாடசாலை மட்டங்களில் செயற்படுத்துமாறு - எமது சங்க உறுப்பினர்களூடாக அறிவுறுத்தியுள்ளோம். அதற்குரிய செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இலங்கை ஆசிரியர் சங்கம் களத்தில் நேரடியாக மேற்கொண்டுவரும் - மனிதாபிமான உதவிகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தாமாக முன்வந்து - அனுசரணை வழங்கிவருகிறார்கள். இந்நிலையில் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி - அவர்களின் ஒருநாள் சம்பளத்தை - வடமாகாண கல்வித்திணைக்களம் அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 11, 2020

16,17,18 திகதிகளில் பணி பகிஸ்கரிப்பு; எந்த செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடமாட்டார்கள்!

எதிர்வரும் 16,17,18 திகதிகளில் இடைக்கால சம்பள அதிகரிப்புக்கான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு வலியுறுத்தி - அதிபர் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளது. இவ்விடயம் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டநிலையில் - வடமாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களில்- அன்றைய தினங்களில் சில பரீட்சைகளை நடத்துவதற்காக ஆசிரியர்களை - அதிகாரிகள் அழைத்து வற்புறுத்தும் நிலையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆசிரியர் அதிபர்களின் 20வருடத்துக்கும் அதிகமான பாதிப்புக்கள் தொடர்பாக - அக்கறை எடுத்திராத அதிகாரிகள் - அதிபர், ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராடும் போது - போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்து - காட்டிக்கொடுக்க முயலும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும். 16,17,18 திகதிகளில் நடைபெறும் பாடசாலை சார்ந்த எந்த செயற்பாடுகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் செல்லவேண்டிய அவசியமில்லை. அதற்காக அஞ்சத்தேவையுமில்லை. இலங்கை ஆசிரியர் சங்கம் முழுப் பொறுப்பேற்கும். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதக விளைவுகளுக்கு - வடமாகாண கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Thursday, March 5, 2020

தேசிய பாடசாலை அதிபர்கள் கடமையேற்க முடியாதவாறு அரசியல் தலையீடு: பொதுச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு! – ஜோசப் ஸ்ராலின் -


278 தேசிய பாடசாலைகளுள் 153 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு -  நேர்முகத் தேர்வு நடைபெற்றது. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிமூலம் -  தகுதிவாய்ந்த அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆயினும் - அதிகாரிகளினதும், அரசியல் வாதிகளினதும் பின்னணியில் - குறித்த அதிபர்கள் கடமையேற்க முடியாதவாறு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் - இத்தகைய முறைகேடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு  கல்வியமைச்சின் செயலாளருக்கும், பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் -

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடம் - கல்வி நிர்வாக சேவைக்குரியதாகும். இதற்கு வடமாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிகல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும், அவருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை.

வவுனியா மத்திய மகாவித்தியாலயத்துக்கு மடுகல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் - அவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை.

இதேபோன்று – சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம், மாத்தறை கலிகம அக்ஷா தேசிய பாடசாலை, பேருவளை அல் -உமைறா தேசிய பாடசாலை உட்பட சிலபாடசாலைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இது கல்வியமைச்சின் மிகப்பெரிய முறைகேடாகும்.

ஒரு சில பாடசாலைகளில் பதில் அதிபர்களாக செயற்பட்டவர்கள் - அரசியல்வாதிகளின் தயவை நாடியிருப்பதே தகுதியானவர்களை நியமிக்க முடியாமைக்கான காரணமாகும். குறிப்பாக – பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி விடயத்தில் இது முதன்மையானதாகக் காணப்படுகின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பொருத்தமானவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் - அதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்ட நிலையிலும் கூட - தமது குறுகிய அரசியலுக்காக அரசியல்வாதிகள் செயற்படுவதும் - அவற்றுக்கு அதிகாரிகள் துணைபோவதுமே கல்வித்துறையைத் தொடர்ந்தும் பாதித்து வருகின்றது.

இந்த முறைகேடுகள் குறித்து – பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம். கல்வியமைச்சுக்கும் முறையான நியமனங்களை அமுல்படுத்துமாறு கூறியுள்ளோம்.

நியமனங்களில் அரசியல்தலையீடுகள் இருப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார். 

Wednesday, February 26, 2020

நாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்!



கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லை.

இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் - இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் - 
நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் - காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும் - மலையக பாடசாலைகளில் 8.00 - 2.00 மணிவரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை  மேற்கொள்வர்.
ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் - அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கமறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

உரியதீர்வு கிடைக்கவில்லையெனின் - மார்ச்மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இதனால் ஏற்படும்  பாதிப்புக்கள் குறித்து - தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது -ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் - ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Monday, February 24, 2020

அதிபர், ஆசிரியர் நாளை சுகயீனலீவுப் போராட்டம்! அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் தொழிற்சங்கங்கள் பொறுப்பேற்கும்! -ஜோசப் ஸ்ராலின் -


நாளை 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து - ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாரிகளினாலோ அல்லது வேறுவகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஏற்படுமாயின் - போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் அதனை பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலய பணிப்பாளரின் கடிதத்தால் அலைக்களிக்கப்பட்ட ஆசிரியர்கள்! இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


வலிகாமம் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு என யாழ்ப்பாண நகரத்திலுள்ள பாடசாலைக்கு - அழைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அலைக்களிக்கப்பட்டுள்ளனர்.

இன்று - 24.02.2020 ஆரம்பகல்வியில் தரம் 1 ஆசிரியர்களுக்கான வாய்மொழி ஆங்கில செயலமர்வு  ஏற்பாட்டாளர்களினால் - 30 பேருக்கான செயலமர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அசமந்தமான செயற்பாட்டால் - நூற்றுக்கணக்கான ஆரம்பகல்வி ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பி அலைக்களிக்கப்பட்டனர்.
ஏற்பாட்டாளர்களினால் 30 பேருக்கானதாகவே செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் - ஏனைய ஆசிரியர்களை திருப்பியனுப்ப முயற்சித்துள்ளனர்.
பாடசாலைகளில் விரல் பதிவு முறைமூலமே வரவு பதியப்படும் நிலையில் - தாம் அதிகதூரம் பணித்து - உரிய நேரத்துக்கு வந்தும் - வீணான அரைநாள் விடுகையாக கணக்கிடப்பட எதிர்ப்புத் தெரிவித்து - 
குழப்பமடைந்தபோது- வலிகாமம் கல்விவலய ஆசிரியர் வள நிலையத்துக்கு மீண்டும் அழைக்கப்பட்டு- முன்னேற்பாடுகள் எதுவுமற்ற - நேரத்தை விரயமாக்கிய விதத்தில் ஆசிரியர்களின் இன்றைய நாள் வீணடிக்கப்பட்டுள்ளது. 
இணைபாடவிதான செயற்பாடுகள் நடத்தப்பட்ட நேரங்களுக்காக - மேலதிக வகுப்புகளை வைத்து - நீலமட்டை புத்தகத்தில் பதியவேண்டும் எனவும் - இல்லையேல் கணக்காய்வுமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்களை அச்சுறுத்தி மேலதிக வகுப்புகளை நடாத்த செய்யும் அதிகாரிகளுக்கு - ஆசிரியர்களின் இன்றைய நாள் வீணடிக்கப்பட்டமைக்கு - வலிகாமம் பணிப்பாளருக்கு வடமாகாண கல்வியமைச்சு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது? என இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Thursday, February 20, 2020

முறைகேடுகளை வடமாகாண கல்வியமைச்சு ஊக்குவிக்கின்றதா?விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!


வடமாகாண கல்விப் புலத்தில் நிகழும் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் பல  ஆதாரங்களுடன் - வடமாகாண கல்வியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் -  குற்றங்கள்   நிரூபிக்கப்பட்ட நிலையிலும் - நடவடிக்கைகள் எடுத்திராத - வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிக்கத் துணைபோவதாகவே கருதவேண்டியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக  - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்பதுடன் - முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு  அழுத்தங்களை ஏற்படுத்தி - அதன்மூலம் முறைகேட்டாளர்களை பாதுகாக்கும் சந்தர்ப்பங்களை - வடமாகாண கல்வியமைச்சு வழங்குகிறதா? என்னும் சந்தேகம் ஏற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே கல்விப் புலத்தில் - முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டு - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது -

யாழ்.நகரின் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை என்பதையும்  ,
நிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையையும், விசாரணைக்குழுவில் மூவருள் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த - வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரின் பிரசன்னமின்றி ஒரே நாளில் விசாரணை முடிக்கப்பட்டமை தொடர்பாகவும், முறைப்பாட்டைச் செய்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்தோ அல்லது ஏனைய சாட்சியாளர்களிடமிருந்தோ எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம்  ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்காதமை தொடர்பாகவும் குறிப்பிட்டு -
அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளார்கள்  என்பதைக் குறிப்பிட்டு - நீதியான மீள் விசாரணைகோரி -  06.12.2019 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராகிய தங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தோம். 

ஆயினும் - முறைகேட்டுக்கு துணைபுரிந்திருந்த அதே விசாரணைக்குழுத் தலைவருக்கே - 27.12.2019 ற்கு முன் - முறைப்பாடு செய்திருந்த இலங்கை ஆசிரியர்
சங்கத்திடம் வாக்குமூலம் பெற்று - அதனையும் உள்வாங்கி மீள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி - அவருக்கு அனுப்பப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை எமக்கும் அனுப்பி தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் - இன்றுவரை - அவ்விசாரணைக்குழுவினால் எவ்வித வாக்குமூலமும் எம்மிடமிருந்தோ, சாட்சிகளிடமிருந்தோ பெறப்படவில்லை என்பதுடன் - விசாரணை அறிக்கையும் முழுமைப்படுத்தப்படவில்லை. 

இதே போன்றே - எம்மால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பல முறைப்பாடுகள் தொடர்பாகவும் -  நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
இத்தகைய தாமதத்தை - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.

குறித்த அதிபரின் முறைகேடுகள் தொடர்பாகவும் - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
பலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக -  வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை மீண்டும் இழுத்தடிக்கப்படுகிறது.

விசாரணை முடிவுறுத்தப்படாத  நிலையில் - மாணவர் அனுமதிக்கு பணம்பெற்றவிடயம் கண்டறியப்பட்டநிலையில் - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்று பேணப்பட்ட விடயமும் குறிப்பிட்டுள்ள நிலையில் -விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் கூறி  - இந்த முறைகேடுகளை மறைத்து வெள்ளையடிப்பதற்காக நேற்றைய தினம் 20.02.2020 வியாழக்கிழமை - அதிபரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிலரால் பொதுக்கூட்டம் ஒன்று பாடசாலையில் கூட்டப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்திற்கு யாழ்.வலயக்கல்வி பணிமனையும் அனுமதி வழங்கியுள்ளதன் பின்னணி என்ன?

இதில் - அதிபரின் முறைகேடுகளை வெளிக்கொணர்வதற்கு துணையாகவிருந்த - அப்பாடசாலையின் பிரதி அதிபரை இடமாற்றுவதற்கு - கையொப்பமிடுமாறு சிலரால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே பாடசாலைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதும் இத்தகைய சம்பவங்கள் மூலம் வெளிப்படுகின்றன.


மேலதிக ஆளணியாக அதிபர் நியமனம் பெற்ற ஒருவரை  - நியமனம் பெற்ற பாடசாலையை தவிர வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்சத்தில் அவரது சேவை  ஆசிரியர் சேவையாகவே கருதப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே - குறித்த பாடசாலை அதிபரின் நியமனமே -வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளில் முதன்மையானதாகும்.

குறித்த விசாரணைகளை - இழுத்தடிக்காது  வடமாகாண கல்வியமைச்சு விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என - வலியுறுத்துகின்றோம்.

எனக் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

பெப்பரவரி 26 - சுகயீன லீவு போராட்டம் ; வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் -


பெப்பரவரி 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து - ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஆசிரியர் அதிபர் சேவைக்கு B.C.பெரேரா சம்பள ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட 23 வருடங்களாக இருக்கும் சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்களின் பலனாக - கடந்த அரசங்கத்தின் அமைச்சரவைக் குழு 2019 ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆசிரியர், அதிபர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக மாற்றி <CLOSED service) புதிய சம்பளப் பரிமாணங்கள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பிரயோகித்த அழுத்தங்களின் விளைவாக புதிய சம்பளத் திட்டத்தை அழுல்படுத்தும் வரை - இடைக்கால சம்பள யோசனை ஒன்றை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டதுடன் அதற்காக 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டியதாக இருந்தது. அத்துடன் இடைக்கால சம்பளத்தைக் கொடுப்பதற்கான சுற்றறிக்கையை வடிவமைக்கும் வேலையை சம்பள ஆணைக்குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
ஆசிரியர், அதிபர்கள் பல தசாப்த காலமாக நசுக்கப்பட்டு வரும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சு எடுத்த தீர்மானம் - தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தலின் வாக்குறுதியாகவும் மாறியது. 

இந்த அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி அதை ஏற்றுக் கொண்டதால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் பொறுப்பில் இருந்து தற்போதைய அரசால் விலக முடியாது.

2019 டிசம்பர் 17 ஆம் திகதி தற்போதைய கல்வி அமைச்சர் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை தொடர்பாக எமது தொழிற்சங்கங்களுடன் உரையாடி - 2020.01.21 திகதி அன்று மீண்டும் கலந்துரையாடல் நடந்தாலும் - உரிய பதில் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் எமது சங்கங்கள் 2020.02.03 முன் உரிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும் - அதை வெளியிடாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்தோம்.

ஆனால் எமது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் கொடுக்காதபடியால் 2020.02.14 திகதி தொழிற்சங்கங்கள் பல இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் அருகில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தி மீண்டும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்.

தற்போதைய அரசு இந்த செயற்பாட்டிற்கும் உரிய பதில் கொடுக்கத் தவறியபடியால் - நாம் எல்லோரும் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை - 'சுகயீன லீவு' அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு போக தீர்மானித்துள்ளோம்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை - காலை 9.30 மணிக்கு இசறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் - சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி - தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Friday, February 14, 2020

20ஆம் திகதிக்குமுன் பேச்சுவார்த்தை - ஆயினும் இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை 26 ஆம்திகதிய சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும்.


ஆசிரிய, அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கப்பட்ட நிலையில் - இடைக்கால சம்பள அதிகரிப்பு  தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கிணங்க - கடந்த 3 ஆம் திகதிக்கு முன்னர் - சுற்றுநிருபமாக வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் சுற்றுநிருபமாக வெளியிடப்படாத நிலையில் - தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என்ற முன்வைப்புக்கிணங்க - இன்று 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கலை 11 மணிக்கு - பேரணி ஆரம்பிக்கப்பட்டு - லோட்டஸ் வீதியூடாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. குறித்த பேரணியில் பல ஆயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தை பேரணி வந்தடைந்தபோது - தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதிசெயலாளர் றோகண அபேரத்னவுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
2மணி நேர பேச்சுவார்த்தையின் பின்னர், 
இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பாக - முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக - எதிர்வரும் திங்கட்கிழமை - ஜனாதிபதிசெயலகம் , கல்வியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கூடி ஆராய்ந்து வரும் 20 ம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி - தொழிற்சங்கத்துக்கு சாதகமான விடயம் குறித்து செய்யக் கூடியவற்றை அறிககையாக தருவதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் - வரும் 26 ஆம்திகதி நடபெறவுள்ள சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் - இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை - அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடமுடியாது எனவும் தெரிவித்தார். வெற்றியின் இறுதி தருணத்தில் - ஆசிரியர்கள் வரும் 26 ஆம் திகதி முழுமையாக போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை -ஆர்ப்பாராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு பொலிஸார் கால்களால் உதைத்து தள்ளினர். ஆயினும் -ஜனாதிபதி  செயலகம் முன்பாகவே தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் கூடியிருந்தனர்.
ஜனநாயக முறையில் அதிபர் ஆசிரியர் போராடியவேளை - ஆசிரியர்களை தாக்கிய பொலிஸாரின் அடாவடித்தன செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் - அரசு இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Wednesday, February 12, 2020

பக்கச்சார்புகள் அகற்றப்படும்வரை பதிலீட்டு வெளிமாவட்ட இடமாற்றங்களுக்கு ஆதரவுதெரிவிக்க மாட்டோம் - இ.ஆ.சங்கம்


யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் கட்டமைப்பில் - அவசியமற்ற அரசியல் தலையீடு உட்புகுந்து – அந்தப் பாடசாலையின் வளர்ச்சி நிலையைக் குழப்பிவருவதாகவும் - அரசியல் தலையீட்டை நீக்கி - பாரபட்சங்களை இல்லாதொழிக்கவில்லையாயின் - தொழிற்சங்க நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - கடிதம் அனுப்பியுள்ளது.

தமது இந்தக் கோரிக்கையை – அவர்களால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளுமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் மைதானம் தொடர்பாக – உள்ள பிணக்கை ஆரம்பத்திலேயே தீர்க்குமாறும் - வடமாகாண கல்வியமைச்சுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தோம். அதன் பின்னரும் - முன்னாள் ஆளுநர்களுக்கும் தெரிவித்திருந்தோம். அப்போது நடவடிக்கை எடுக்காத – வடமாகாண கல்வியமைச்சினதும், வடமாகாண கல்வி திணைக்களத்தினதும் செயற்பாடு காரணமாக - இன்று குறித்த பாடசாலை பாரிய குழப்பநிலையை அடைந்திருக்கிறது.
இந்த குழப்ப நிலைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் -
ஆசிரியை ஒருவருக்கு முறையாக இடமாற்றச் சபையூடாக வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றங்களை – அரசியல் செல்வாக்குகளினூடாக இரு வருடங்கள் தொடர்ச்சியாகப் பிற்போட்டு – அந்த இடமாற்றம் - பின்னர் கோப்பாய் கோட்டத்துக்கான இடமாற்றமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் - தற்போது – கோப்பாய் கோட்ட பாடசாலையொன்றுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கூட – அரசியல் செல்வாக்கின்மூலம் சவாலுக்கு உட்படுத்தி - முழுக் கல்விக் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதையும், அதற்கு உடந்தையாக வடமாகாண கல்வியமைச்சும் செயற்பட்டு வருவதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இடமாற்ற மேன்முறையீடுகளின் போது – குறித்த ஆசிரியை தான் கற்பித்திராத பாடத்துறையில் 100 வீதம் சித்திபெற்றுக் கொடுத்ததாக உரிமைகோர முயன்றதையும், இதனைப் போன்று பொய்யான காரணங்களையே மேன்முறையீடுகளில் தெரிவித்தும் அதிகாரிகளையும், இடமாற்றச்சபையையும் ஏமாற்றியுமுள்ளமை தொடர்பாக தற்போது – ஆதாரபூர்மான தரவுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்.மாவட்டங்களிலிருந்து – பதிலீடான சேவையை மேற்கொள்ளும் தேவை கருதி -  44 வயதுக்குட்பட்ட  பெண் ஆசிரியர்கள் பலரும் - பல குடும்பச்சுமைகளின் மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். ஆனால் குறித்த ஆசிரியை  போன்றவர்கள் - வயது குறைந்த நிலையிலும்  அரசியல்வாதிகளை வைத்து கல்வித்துறையில் அரசியல் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது.
வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்யாது – அரசியல்வாதிகளின் தயவில் இருக்கும் குறித்த ஆசிரியைக்கு  – முன்னர் வழங்கிய  வெளிமாவட்டத்துக்கான பதிலீட்டு இடமாற்றம் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசரியர் சங்கம் வலியுறுத்துகின்றது. இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் - இந்த இடமாற்றம் சீர்செய்யப்படும்வரை – யாழ்.மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு – பதிலீடாக அனுப்பப்படும் ஆசிரிய ஆளணியை அனுப்புவதற்கு, வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற முடிவை இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஒரு மாத காலத்துக்குள் - குறித்த ஆசிரியையின் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் - வெளிமாவட்டங்களிற்கு -யாழ்.மாவட்டத்திலிருந்து பதிலீடாக அனுப்பப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் திரட்டி - உடனடியாகவே சொந்த வலயங்களுக்கே இடமாற்றம் வழங்கக்கோரி - தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் - போராட்டங்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் - ஆசிரியர்களுக்கு நாம் வழங்கும் உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது இந்தக் கோரிக்கையை – எம்மால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளும் வடமாகாண ஆளுநருமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 
 



Thursday, January 23, 2020

இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் இணக்கம்


இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய கல்வியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் - இதனை ஆரம்ப தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன எனவும் -  இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து -ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த வருடம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி மார்ச் 13 மற்றும் செப்ரெம்பர் 26,27 திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்காரணமாக - கடந்த மைத்திரி -ரணில் அரசாங்கத்தினால் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உபகுழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 29 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் உபகுழுவுக்கும் இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் திகதி - ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கி <closed service> அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்காரணமாக -  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களும் கல்வியமைச்சும் இணைந்து முன்மொழிந்த சம்பளதிட்டத்தை ஆராய்ந்த ரனுகே ஆணைக்குழு -பரிந்துரைத்திருந்த சம்பளதிட்டத்தை நடைமுறைப்படுத்தும்வரை இடைக்கால சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக - அப்போதைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை - நடைமுறைப்படுத்த சம்பள ஆணைக்குழுவின் அனுமதிபெறவேண்டியிருந்த நிலையில் - நவம்பர் 14 இல் சம்பள ஆணைக்குழு கூடிய நிலையிலும் - முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. 
இந்நிலையில் - நவம்பர் 16 இன் பின்னர் - தற்போதைய புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் - புதிய கல்வியமைச்சராக பொறுப்பேற்ற டலஸ் அழகப்பெருமாவுடன் 17.12.2019 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.
இதன்போது - இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறியவேண்டியிருப்பதாக கூறி புதிய கல்வியமைச்சர் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதனடிப்படையில் - ஜனவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பதில் வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரி கடிதம் அனுப்பியுமிருந்தது.
இதனடிப்படையில் - கடந்த 20 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது,
ஆசிரியர் அதிபர் சேவையை ஏனைய சேவைகளோடு சேர்க்காமல் அகப்படுத்தப்பட்ட சேவையாக்கினால் சம்பளம் அதிகரிக்க முடியும் என சம்பள ஆணைக்குழுவும் தற்போது தெரிவித்துள்ளது.
எனவே - தற்போதைய அரசாங்கமும் - டிசம்பர் மாதம் ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட <closed service> சேவையாக்கி அமைச்சரவையில் தீர்மானித்துள்ள நிலையில் -
இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்தார். இதனை தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன.
ஆயினும் - இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 

Monday, January 13, 2020

யாழ்.வலய இடமாற்றங்களில் பாரபட்சங்கள்; தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வோம்! -ஜோசப் ஸ்ராலின்

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நடைபெற்ற 7 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் பணியாற்றியவர்களுக்கான உள்ளக இடமாற்றங்களில் - பக்கச்சார்பான செயற்பாடுகளும், முறையற்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேன்முறையீடுகள் பல ஆசிரியர்கள் செய்துள்ள நிலையில் - மேன்முறையீடுகளை சபை மூலம் பரிசீலிக்காத நிலையில் - ஒரு சிலருக்கு மட்டும் மேன்முறையீடுகளுக்கு தனிப்பட்ட முறையிலேயே பக்கச்சார்பாக தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இதன்மூலம் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபை தீர்மானங்களுக்கு அமைய பொதுவான நீதி பின்பற்றப்படவேண்டும். யாழ்.கல்வி வலயத்தின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் பலர் மனஉழைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
இடமாற்றங்களை வழங்கிவிட்டு வலயக்கல்விப்பணிப்பாளர் நீண்ட விடுப்பில் உள்ளார். யாழ்.வலய கல்வி பணிமனைக்கு நிர்வாகத்துக்குப் பொறுப்பாக நீண்ட நாட்களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.
அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களினால் - ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அலைக்கழிகின்றனர்.
கடமையிலுள்ள அதிகாரிகளோ - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தீர்வுகளை கூறி செயற்படுகின்றனர்.
இவ்வாறான பாரபட்சமான முறைகள் - மேன்முறையீட்டு சபை கூடுவதற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டும்.
இவ்வாறான  - பாரபட்சமான அணுகுமுறையிலான இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

பாரபட்சமாக இடமாற்ற அணுகுமுறை தொடருமாயின் - வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்கள் அனைத்துக்குமாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோம் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 8, 2020

வலிகாமம் பணிப்பாளருக்கெதிராக ஆர்ப்பாட்டம் : கல்வியமைச்சின் செயலாளருடனும் சந்திப்பு!


வலிகாமம் கல்வி பணி;ப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இடமாற்றங்கள் மூலம் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கை அசிரியர் சங்கத்தினால் இன்று புதன்கிழமை மாலை 2.30 மணியளவில் - நல்லூர் செம்மணிவீதியிலுள்ள - வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது – வலிகாமம் கல்வி வலயத்தில் நடைபெற்ற இடமாற்றங்கள் குறித்த பட்டயலின் அடிப்படையில் - ஆசிரியர்களுக்கு முறையற்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை குறித்தும், அதனால் பாதிப்படைந்துள்ளவர்கள் தொடர்பாகவும்,  வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து – மீளவும் இடமாற்றச்சபை கூடி – மேலதிக ஆசிரியர் ஆளணி, சுயவிருப்பு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்களுடன் அனைத்து இடமாற்றங்களையும் மீளாய்வு செய்யப்படும் எனவும், அதுவரை இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்திவைக்க நடவடிக்கை எடு;ப்பதாகவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.
அத்துடன் - பல வழிகளிலும் தனக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பாக – முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அங்கு பிரச்சினை உண்டென்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரை நேற்றைய  தினம் அழைத்து கலந்துரையாடியுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதனைத்;தொடர்ந்து -  வடமாகாண கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே – வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இருந்தபோது – எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால்- வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் - இலங்கை அசிரியர் சங்கத்தால் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
இதன்போது – அவற்றுக்குரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.