Thursday, November 14, 2019

பாடசாலைகளில் டெங்கு அச்சுறுத்தல் தொடர்பாக உடன் நடவடிக்கை வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் -

 வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பல மாணவர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டு - அப்பாடசாலையின் சூழலில் டெங்கு நோய்க்குரிய குடம்பிகளும் கண்டறியப்பட்ட நிலையில் - குறித்த பாடசாலை இன்று மூடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு - உடனடியாக தற்காலிக தீர்வு காண்பதில் மட்டுமே அதிகாரிகள் கரிசனை செலுத்தி வருகின்றனர். மாறாக - நிரந்தர தீர்வுகளை முன்வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கரிசனை செலுத்தி - பொறிமுறைகளை உருவாக்குவதே பொருத்தமாக அமையும்.

பாடசாலையில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லி டெங்கு நோய் தொடர்பாக - பாடசாலை நிர்வாகம் பொறுப்பற்று செயற்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் கூட - உரியமுறையில் செயற்பட்டிருக்காமையும் மாணவிகள் பாதிக்கப்பட்டமைக்கான காரணியாகும்.

ஒரு பாடசாலையை மூடுவதால் மட்டும் பிரச்சினைக்கு முடிவுகாணமுடியாது. டெங்கு நுளம்புகள் பாடசாலை எல்லைக்குள் மட்டுமல்லாமல் அயலிலுள்ளவர்களின் மீதும் நோயைப்பரப்ப கூடியது. ஜனாதிபதி தேர்தலையொட்டிய விடுகை காலத்தில் உடனடியாக உரிய திட்டத்தை உருவாக்கி உரிய நடவடிக்கைகள் அனைத்து தரப்பாலும் முன்னெடுக்கப்படவேண்டும். 

அத்துடன் - அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய அனைத்து வழிகளையும் தடைசெய்து - மாணவர்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் - பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு - தொடர் கண்காணிப்பில் பாடசாலைகள் நிர்வகிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 5, 2019

அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது: - ஜோசப் ஸ்ராலின் -


எதிர்வரும் 8 ஆம் திகதி – அதிபர், ஆசிரியர் தொழிங்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு, ஜனாதிபதித் தேர்தல் முடிவுறும் வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக -தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 05.10.2019 அமைச்சரவை கூடியிருந்த போதும் - சம்பள ஆணைக்குழுவினரால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலேயே முடிவினை மேற்கொள்ள முடியாது போனதாக கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் - சம்பள ஆணைக்குழுவினரின் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடியே எடுக்கமுடியும் எனவும் -  எதிர்வரும் 14 ஆம் திகதியே சம்பள ஆணைக்குழு கூடவுள்ளதால்- அந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை என்வும் கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் - ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்வரும் 8 ஆம் திகதி – பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்த போது - தேர்தல்கள் ஆணையாளர் தொழிற்சங்க உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது – தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் - தொழிற்சங்கப் போராட்டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தும். அதேவேளை – தேர்தல் காலங்களில் - புதிய தீர்மானங்களை அரசாங்கத்தால் எடுப்பதும் வாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே அமையும். இதனால் - அரசாங்கம் எடுக்கும் முடிவுகளிலும் தேர்தல் திணைக்களம் தலையிடவேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் - தேர்தல் கடமைகளில் - அதிபர், ஆசிரியர்களும் ஈடுபடவுள்ள நிலையில் - அவர்களுக்கான தேர்தல் வகுப்புகளும் நடைபெறவுள்ள நிலையில் - தேர்தல் செயற்பாடுகளையும் தொழிற்சங்கப்போராட்டம் பாதிப்படையச் செய்யும். இதனால் - இப்போராட்டத்தை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தவேண்டாம் என தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் - அதிபர், ஆசிரியர் தொடர்பான சம்பளப் பிரச்சினை தொடர்பாக – விரைவாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பள ஆணைக்குழுவுக்கும், கல்வியமைச்சுக்கும் தான் எழுத்துமூலம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு – தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் - நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர்  - தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Friday, November 1, 2019

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அசமந்தம்; நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

வடமாகாணம், வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் -தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்திருந்தும்   - வவுனியா வடக்கு கல்வி அதிகாரிகளின் அசண்டையீனத்தினால் அவர்கள் வாக்களிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுத்திகதியான 04.10.2019 அன்று விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பாமல் 08.10.2019 இன் பின்னரே வலயக்கல்வி பணிமனையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 
இவர்களின் அசண்டையான தாமதம் காரணமாக நூறுக்கும் அதிகமான யாழ்மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகாரிகளின் அசண்டையீனங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி - இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
.