Friday, August 30, 2019

மோசடிகளுக்கு வடமாகாண ஆளுநரும் துணைபோகின்றாரா? ஜோசப் ஸ்ராலின் கேள்வி!



வடமாகாணக் கல்வியில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள்  தொடர்பாக – வடமாகாண - ஆளுநர் சுரேன் இராகவனிடம் - இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டிருந்தும் கூட - இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் - அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயற்பாட்டால் ஆளுநரும் முறைகேட்டாளர்களைப் பாதுகாத்து வருகின்றார். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் -

வடமாகாண - ஆளுநர்  -ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கும் - இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முறைகேடுகளை விசாரிக்க முறையான விசாரணைக்குழு கூட அமைக்காத அவரது செயற்பாட்டுக்குமிடையே காணப்படும் இரண்டை தன்மைகள் கவலைக்குரியது.

இலங்கை ஆசிரியர் சங்கம் சகல குற்றச்சாட்டுக்களையும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாகவே  சமர்ப்பித்திருந்தது. அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளையும் கோரியிருந்தது. ஆனால் - விசாரணைக் குழுவை நியமிக்காத காலதாமதத்தால் - குறித்த பாடசாலையொன்றில் மிக அவசரமாக போலியான பற்றுச்சீட்டுக்கள் போடப்பட்டு வருவதாக – ஆளுநர் செயலகத்தினருக்கும் தெரிவித்திருந்தோம் .

நாம் குறிப்பிட்ட - எம்மிடமுள்ள ஆதாரங்கள் நிறைந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக – எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால் - குறித்த அதிபரொருவர் தொடர்பான தமது ஆரம்பகட்ட விசாரணையில் குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டுள்ளதாக – வடமாகாண கல்வியமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி கல்வி யை நேசிக்கும்  சமூகத்தின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் - சில ஆதாரங்களை வடமாகாண ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கும் கூட அனுப்பிவைத்திருந்தோம். சாட்சியங்களையும், சாட்சியாளர்களையும் விசாரணைக்குழுவில் முன்னிலைப்படுத்துவோம் எனவும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் -

வடமாகாண கல்வியில் நிகழும் பாரிய நிதிமோசடிகளையும், முறைகேடுகளையும் மறைக்கும் விதமாக
வடமாகாண கல்வியதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணை நடந்துள்ளனவா?
விசாரணை நடைபெற்றதாயின் முறைப்பாட்டை மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடமிருந்து தகவல்களை ஏன் கோரவில்லை?
வடமாகாண ஆளுநரின் செயலணியொன்று – குறித்த பாடசாலைக்கு சென்றதாகவும், அப்பாடசாலைகளில் நிதிமுறைகேடுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் கூட ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் வடமாகாண ஆளுநர் ஏன் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த மோசடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் வடமாகாண ஆளுநரும் துணைபுரிகின்றாரா?
போன்ற விடயங்களை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளிப்படுத்தவேண்டும்.

வடமாகாணத்திலுள்ள தேசிய மற்றும் வடமாகாண பாடசாலைகளில் - பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென – பெருந்தொகையான பணத்தினைப் பெற்றோரிடமிருந்து சில அதிபர்கள் முறைகேடாகப் பெற்றுவருகின்றனர். அவற்றில் ஒரு பகுதியினை தமது தனிப்பட்ட கணக்குகளிலும் வைப்பிலிட்டு – முறைகேடாக சொத்துக்கள் குவித்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஊடகங்களிலும் வெளிவருகின்றன.

யாழ்ப்பாணப் பிரபல கல்லூரியொன்றின் அதிபர் – தாம் அடைக்கவேண்டிய தனிப்பட்ட கடனை அடுத்த வருட மாணவர் அனுமதியின் போது திருப்பி தந்துவிடுவதாகக் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் - முறைகேடுகளை நிறுத்துவதற்கு ஆரம்பப் புள்ளியைக் கூட உருவாக்க முயலாமல்  இருக்கும் வடமாகாண ஆளுநரின் செயற்பாடு கவலையளிக்கிறது.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்காமல் - வடமாகாணத்தினை நேர்மனப்பான்மைகொண்ட - முன்னுதாரணமான கல்வி நிலைக்கு கொண்டு வருவதென்பது ஒருபோதும் சாத்தியப்படப்போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடமாகாண ஆளுநர் – எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக - இரண்டுமாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்வது தவிர்க்கமுடியாதது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.



Thursday, August 8, 2019

மூத்த தொழிற்சங்கவாதி தியாகலிங்கம் மறைவு; இறுதிக் கிரியைகள் நாளை!



மூத்த தொழிற்சங்கவாதியும் மிக இக்கட்டான காலகட்டங்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளராக இருந்து குரல்கொடுத்தவருமான தோழர் ச.தியாகலிங்கம் நேற்று 07.08.2019 இயற்கையெய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09.08.2019 மாலை 2.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்துக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.


தோழர் தியாகலிங்கத்தின் மறைவிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அஞ்சலியை செலுத்துவதுடன் - அவரது குடும்பத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தோழர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்,

பரீட்சைக் கொடுப்பனவு இணைந்த படிகளுடன் சேர்த்து வழங்கப்படும்; பரீட்சை ஆணையாளர் - ஜோசப் ஸ்ராலின் சந்திப்பில் இணக்கம்!



இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வழங்கும் தற்போதைய கொடுப்பனவுகளின் முரண்பாடுகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சைத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

தரம் 5 மற்றும் உயர்தர பரீட்சைக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இணைப்பாளருக்கு 600/- ரூபாவும் துணை இணைப்பாளருக்கு 300/- ரூபாவும் மேற்பார்வையாளர்களுக்கு 300/- ரூபாவுமாக 1500/- ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கும் 2019/27 தற்போதைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு க.பொ.த சா/தர பரீட்சை வரை இணைந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் இணைந்த கொடுப்பனவை நீக்கியே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

2018.08.21ம் திகதி வெளியிடப்பட்ட 20/2018 நிர்வாக சுற்றறிக்கையில் இணைந்தகொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதுடன்- 24 மணிநேரம் கடமையாற்றுவோருக்கு 50வீதம் மேலதிக கொடுப்பனவாகவும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அமுல்படுத்தாமல் - இணைந்த கொடுப்பனவையும் வழங்காமலே - மேலதிக கொடுப்பனவாக மட்டும் வழங்க முயற்சிக்கிறார்கள்.

இந் விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் பரீட்சை ஆணையாளருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இணைந்த கொடுப்பனவை வழங்க பரீட்சை ஆணையாளர் தற்போது இணங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இவ்விடயங்களை உயர்தர பரீட்சை  முடிவதற்குள் சுற்றறிக்கையாக வெளியிடுமாறும் - இனிமேல் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது தவிர்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, August 6, 2019

வடமாகாணத்தில் பரீட்சை வேளைகளில் மின்தடை - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் - வடமாகாணத்தின் பல பாகங்களில் அடிக்கடி இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக – மன்னார் மாவட்டத்தில் நேற்றைதினம் (05.08.2019) அன்று இரவு முழுவதும் மின்சாரம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் பல வருடங்களாக தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பரீட்சை வேளைகளில் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தும் வேளைகளிலும், பரீட்சை நடைபெறும் நாட்களிலும் கல்விச் செயற்பாடுகளைக் குழப்பும் விதமாக நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இலங்கை மின்சாரசபை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறையாக செயற்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.