Wednesday, July 26, 2017

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

வடமாகாண கல்வியமைச்சு சரியான நிதி மூலங்களை பாடசாலைகளுக்கு வழங்காமலும் பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் மேலதிக சேவைநேரங்களைக் கவனத்தில் எடுக்காததுமான நிலைமை - வடமாகாண கல்வியை பாதிப்பது மட்டுமன்றி -  இன்று வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் முறைகேட்டுக்கும் அதிகார துஸ்பிரயோகத்துக்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பின்தங்கிய பாடசாலைகளிற்கு வருகை நேரக்கணிப்பு இயந்திரம் பொருத்தவில்லை என்பதற்காக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளரால் அதிபர்களுக்கு இம்மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை.

போதிய நிதிவசதியின்றி இயக்கப்படும் பாடசாலைகளில் மாணவர்களுக்காக பயன்படுத்தப்படவேண்டிய தரஉள்ளீட்டு பணத்தில் இயந்திர கொள்வனவு செய்யவேண்டும் என வற்புறுத்துவது முறையற்ற நிதிப்பயன்பாடாகும். இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - குறித்த நிறுவனம் ஒன்றுடன் வலயக்கல்விப்பணிப்பாளரே ஒப்பந்தம் செய்து - இயந்திரங்களை கொள்வனவுசெய்துள்ளார் எனவும் இவற்றினை விற்றுத் தீர்க்கும் முகமாகவே அதிபர்களின் சம்பளங்களை நிறுத்தி அடாவடித்தனம் செய்வதாகவும் அறியமுடிகின்றது. இச் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாணக்கல்வியமைச்சு விரைவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார்.

Sunday, July 16, 2017

19.07.2017 புதன்கிழமை - மடு கல்விவலய அதிபர் ஆசிரியர்களுடன் - ஜோசப் ஸ்ராலின் சந்திக்கவுள்ளார்

மடு கல்விவலய அதிபர் - ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19.07.2017 புதன்கிழமை ஆண்டாங்குளம் றோ.க. பாடசாலைக்கு அருகிலுள்ள - ஆண்டாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் - வடமாகாணத்தின் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ள - இக் கலந்துரையாடலில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் - புதிய சம்பள மாற்றங்கள் - இடமாற்றங்கள் - மற்றும் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. மடு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள்-  அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய முடியுமென மடுவலய இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, July 7, 2017

போயா தினத்திலும் - தொலைபேசி அழைப்பில் வலிகாம வலயத்தில் நாளை செயலமர்வு : ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை தவிர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ள போதிலும்  - அத்தகைய விடுமுறை தினங்களிலேயே ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை நடத்தி ஆசிரியர்களை அடிமைபோன்று நடத்தும் வடமாகாண கல்வி திணைக்களத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாளை சனிக்கிழமை போயாவிடுமுறை தினமாகும். அத்துடன் - இந்துக்களின் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவுமாகும். இந்நிலையில் -  வலிகாமம் கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை செயலமர்வுக்கு வருமாறு – திடீரென இன்று வெள்ளிக்கிழைமை தொலைபேசி வாயிலாக - அச்சுறுத்தல் தோறணையில் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நிதியினை செலவழிப்பதற்காகவே இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.; ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாச அழைப்பினைக்கூட விடுக்காது – தொலைபேசி அழைப்பினூடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயினாதீவு ஆலய தேருக்கு செல்லவேண்டும் எனக் கூறிய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு - ஆசிரியர்களை அடிமையாக நடத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த போதிலும் - தமது செயற்பாடு தவறு என அவரால் குறிப்பிட்டிருந்த போதிலும் - அவரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சு – ஆசிரியர்களின் நலன் சார்ந்தும் சிந்திக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.