Wednesday, March 11, 2020

16,17,18 திகதிகளில் பணி பகிஸ்கரிப்பு; எந்த செயற்பாடுகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடமாட்டார்கள்!

எதிர்வரும் 16,17,18 திகதிகளில் இடைக்கால சம்பள அதிகரிப்புக்கான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு வலியுறுத்தி - அதிபர் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறவுள்ளது. இவ்விடயம் முற்கூட்டியே அறிவிக்கப்பட்டநிலையில் - வடமாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களில்- அன்றைய தினங்களில் சில பரீட்சைகளை நடத்துவதற்காக ஆசிரியர்களை - அதிகாரிகள் அழைத்து வற்புறுத்தும் நிலையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஆசிரியர் அதிபர்களின் 20வருடத்துக்கும் அதிகமான பாதிப்புக்கள் தொடர்பாக - அக்கறை எடுத்திராத அதிகாரிகள் - அதிபர், ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராடும் போது - போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்து - காட்டிக்கொடுக்க முயலும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும். 16,17,18 திகதிகளில் நடைபெறும் பாடசாலை சார்ந்த எந்த செயற்பாடுகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் செல்லவேண்டிய அவசியமில்லை. அதற்காக அஞ்சத்தேவையுமில்லை. இலங்கை ஆசிரியர் சங்கம் முழுப் பொறுப்பேற்கும். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதக விளைவுகளுக்கு - வடமாகாண கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Thursday, March 5, 2020

தேசிய பாடசாலை அதிபர்கள் கடமையேற்க முடியாதவாறு அரசியல் தலையீடு: பொதுச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு! – ஜோசப் ஸ்ராலின் -


278 தேசிய பாடசாலைகளுள் 153 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு -  நேர்முகத் தேர்வு நடைபெற்றது. பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிமூலம் -  தகுதிவாய்ந்த அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆயினும் - அதிகாரிகளினதும், அரசியல் வாதிகளினதும் பின்னணியில் - குறித்த அதிபர்கள் கடமையேற்க முடியாதவாறு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் - இத்தகைய முறைகேடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு  கல்வியமைச்சின் செயலாளருக்கும், பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் -

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அதிபர் பதவி வெற்றிடம் - கல்வி நிர்வாக சேவைக்குரியதாகும். இதற்கு வடமாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிகல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும், அவருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை.

வவுனியா மத்திய மகாவித்தியாலயத்துக்கு மடுகல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் - அவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை.

இதேபோன்று – சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயம், மாத்தறை கலிகம அக்ஷா தேசிய பாடசாலை, பேருவளை அல் -உமைறா தேசிய பாடசாலை உட்பட சிலபாடசாலைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட அதிபர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
இது கல்வியமைச்சின் மிகப்பெரிய முறைகேடாகும்.

ஒரு சில பாடசாலைகளில் பதில் அதிபர்களாக செயற்பட்டவர்கள் - அரசியல்வாதிகளின் தயவை நாடியிருப்பதே தகுதியானவர்களை நியமிக்க முடியாமைக்கான காரணமாகும். குறிப்பாக – பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி விடயத்தில் இது முதன்மையானதாகக் காணப்படுகின்றது.

தேசிய பாடசாலைகளுக்கு பொருத்தமானவர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் - அதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்ட நிலையிலும் கூட - தமது குறுகிய அரசியலுக்காக அரசியல்வாதிகள் செயற்படுவதும் - அவற்றுக்கு அதிகாரிகள் துணைபோவதுமே கல்வித்துறையைத் தொடர்ந்தும் பாதித்து வருகின்றது.

இந்த முறைகேடுகள் குறித்து – பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம். கல்வியமைச்சுக்கும் முறையான நியமனங்களை அமுல்படுத்துமாறு கூறியுள்ளோம்.

நியமனங்களில் அரசியல்தலையீடுகள் இருப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுப்போம் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.