Friday, June 14, 2019

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விசாரணைக்கு வலியுறுத்து!

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் ;- உரிய நடடிவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேல்மாகாண ஆளுநர் முசாமிலிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை 12.06.2019 அன்று மேல் மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையேயான சந்திப்பின்போது மேல்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விஜயபந்து, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரத்மலானை இந்துக் கல்லூரியில் விளையாட்டுக்கான பயிற்சி பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதில் 35 பேரே பயிற்சி பெறுகின்றனர். இரத்மலானை இந்துக் கல்லூரியின் விடுதியில் 86 பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் மாதாந்தம் 5000 ரூபா பணமும் அறவிடப்பட்டுள்ளது.

2018 இல் மட்டும்  விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக ரூபா 15 லட்சம் வீதம் 3 தடவைகள் காசோலை மூலம் ரூபா 45 லட்சம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான சத்துணவுக்காகவும் வழங்கப்பட்டது. பயிற்சிபெறும் மாணவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக் கூடியதான – தினமும் வழங்கப்படவேண்டிய சத்துணவு தொடர்பான அட்டவணைபடியே வழங்கப்படவேண்டும்.
ஆனால் - அதிபரால் மிகத் தரம் குறைந்த உணவுகளே விடுதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் - அந்த உணவையே விளையாட்டுப் பயிற்சி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்துடன் வழங்கப்பட்ட பருப்பு கறியிலும் புழுக்கள் இருந்துள்ளமை பரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மதியம் சமைத்த உணவுகளே பல தடவைகள் மாணவர்களுக்கு இரவு உணவாகவும் வழங்கப்பட்டிருந்தது. விடுதி மாணவர்களிடம் அறவிடப்படும் தொகைகள் தொடர்பாகவும் எவ்வித கணக்கும் காட்டப்பட்டிருக்கவில்லை. பணத்தினை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கே அதிபர் வைப்பிலிட்டுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யும்போது - கூறுவிலைகோரப்பட்டிருக்கவில்லை.
விளையாட்டுப் பயிற்சிகளுக்கு தரமான பயிற்றுவிப்பாளர்களை வழங்காமல் சந்தர்ப்பத்துக்கேற்ப ஆட்களை நியமித்து செயற்பட்டுள்ளார். இவை அனைத்தின் மூலம் பெருந்தொகையான ஊழல் மோசடியில் குறித்த அதிபர் ஈடுபட்டிருந்தமை பிலியந்தல கல்வி வலயத்தினால் 31.10.2018 திகதிய விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. ரூபா 1500 க்கு மேற்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் காசோலை மூலமே வழங்கப்படவேண்டும். ஆனால் - அனைத்துக் கொடுப்பனவுகளும் பணமாகவே வழங்கப்பட்டுள்ளன. விடுதி மாணவர்களிடமிருந்து 2016 -2018 ஆம் ஆண்டு வரை அறவிடப்பட்ட பல லட்சம் ரூபா பணம் தொடர்பாக பற்றுச்சீட்டுக்கள் எவையும் இல்லை. அப்பணம் எங்கே என்னும் விடயமும் தெரியாதுள்ளது.
அத்துடன் - தமிழ் மாணவர்களை காரணம் காட்டி புலம்பெயர் மக்களின் உதவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நிதி தொடர்பாகவும் கணக்குகள் இல்லை.
மாணவர்களின் உணவுத் தேவைகளுக்காக “ஓசானிக்” எனும் பெயருடைய கம்பனியொன்று அரிசியை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதிலும் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளது.
இது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதுடன் - பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரோகத்தனமான செயற்பாடுமாகும்.  குறித்த பாடசாலை ஆசிரியர்களும் அதிபரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் - மேல் மாகாண தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளரும் இந்த அதிபரின் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment