Thursday, November 14, 2019

பாடசாலைகளில் டெங்கு அச்சுறுத்தல் தொடர்பாக உடன் நடவடிக்கை வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் -

 வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பல மாணவர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டு - அப்பாடசாலையின் சூழலில் டெங்கு நோய்க்குரிய குடம்பிகளும் கண்டறியப்பட்ட நிலையில் - குறித்த பாடசாலை இன்று மூடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு - உடனடியாக தற்காலிக தீர்வு காண்பதில் மட்டுமே அதிகாரிகள் கரிசனை செலுத்தி வருகின்றனர். மாறாக - நிரந்தர தீர்வுகளை முன்வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கரிசனை செலுத்தி - பொறிமுறைகளை உருவாக்குவதே பொருத்தமாக அமையும்.

பாடசாலையில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லி டெங்கு நோய் தொடர்பாக - பாடசாலை நிர்வாகம் பொறுப்பற்று செயற்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் கூட - உரியமுறையில் செயற்பட்டிருக்காமையும் மாணவிகள் பாதிக்கப்பட்டமைக்கான காரணியாகும்.

ஒரு பாடசாலையை மூடுவதால் மட்டும் பிரச்சினைக்கு முடிவுகாணமுடியாது. டெங்கு நுளம்புகள் பாடசாலை எல்லைக்குள் மட்டுமல்லாமல் அயலிலுள்ளவர்களின் மீதும் நோயைப்பரப்ப கூடியது. ஜனாதிபதி தேர்தலையொட்டிய விடுகை காலத்தில் உடனடியாக உரிய திட்டத்தை உருவாக்கி உரிய நடவடிக்கைகள் அனைத்து தரப்பாலும் முன்னெடுக்கப்படவேண்டும். 

அத்துடன் - அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய அனைத்து வழிகளையும் தடைசெய்து - மாணவர்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் - பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு - தொடர் கண்காணிப்பில் பாடசாலைகள் நிர்வகிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment