கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதனால் பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை 2011 இலிருந்து அவரை நீதிமன்ற செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கியிருந்த நிலையில் - இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அவசியமற்ற தலையீடு கவலையளிக்கிறது.
தாம் பணியாற்றும் துறைசார்ந்து, அதனை விருத்தி செய்யும் பொருட்டு, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தமது துறைசார் அனுபவத்துக்காகச் செயற்படுவது சாதாரணவிடயமாகும். அதன் அடிப்படையில் ஏனைய பல்கலைகலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை உண்டு.
காணாமால் போனோர் தொடர்பான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வடக்குப் பகுதியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சமூக வேண்டுகோளாகும்.
இந்த நிலையில் - தனது சட்டப் புலமை மூலம் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு கலாநிதி குமாரவடிவேல் குமரகுருபரன் சட்டத்தரணியாக செயற்பட முன்வந்திருந்தமை வரவேற்கக்கூடிய செயற்பாடாகும்.
இதற்காக முன்னர் எந்தவகையான தடையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விதித்திருக்கவில்லை. யாழ்.பல்கலைக்கழகப் பேரவை தனது சுயாதீனத்தன்மையின் அடிப்படையில் 2011 முதல் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது பேரவையின் சுயாதீனத் தன்மையில் தலையீடு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டத்துறையில் புலமைவாய்ந்த கலாநிதி குருபரனை பல்கலைக்கழக செயற்பாட்டிலிருந்து விலகவைப்பதானது, பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
இவ்விடயம் தொடர்பாக, ஆராய்ந்து, பொருத்தமான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.
No comments:
Post a Comment