Monday, September 19, 2016
“எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு
24.09.2016 அன்று நடைபெறவுள்ள “எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து தமது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் தெரிவித்துக் கொள்வதாக கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -
ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் - பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக – எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எமது பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும் வழங்கி நிற்கின்றோம்.
நடந்துமுடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னய சூழ்நிலைகளும் - நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு - தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக – தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவதற்குரிய சூழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
தமிழர் தாயகமானது - சிங்கள பௌத்த மயமாக்கலுக்குட்பட்டு - பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பௌத்தர்களையும், சிங்கள சகோரர்களையும் வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக - எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது – அடக்குமுறையின் அடையாளமாக – சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின் தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகும். எனவே – தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும்.
கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு - அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு - மக்களுக்கு வழங்கவேண்டும்.
இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட - சரணடைந்த பின்னும் காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு - பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும்.
இன அழிப்பு தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான – பக்கச்சார்பற்ற – சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் - இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம் அதன் தனித்துவம், இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சம~;டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும்.
இவைபோன்ற கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்கவேண்டும். தற்போதைய சூழலில் ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்படவேண்டும். ‘எழுக தமிழ்” பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment