Friday, September 9, 2016

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்




யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் - சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது – அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட - அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை – மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
இம்மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் - செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட - இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது.
மிக அண்மைக்காலமாக – மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறைகொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் - இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது - எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்? என்பது புரியவில்லை.
எனவே – சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படவேண்டும் என்பதுடன் - வன்முறையை கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment