Wednesday, July 26, 2017

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

வடமாகாண கல்வியமைச்சு சரியான நிதி மூலங்களை பாடசாலைகளுக்கு வழங்காமலும் பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் மேலதிக சேவைநேரங்களைக் கவனத்தில் எடுக்காததுமான நிலைமை - வடமாகாண கல்வியை பாதிப்பது மட்டுமன்றி -  இன்று வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் முறைகேட்டுக்கும் அதிகார துஸ்பிரயோகத்துக்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பின்தங்கிய பாடசாலைகளிற்கு வருகை நேரக்கணிப்பு இயந்திரம் பொருத்தவில்லை என்பதற்காக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளரால் அதிபர்களுக்கு இம்மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை.

போதிய நிதிவசதியின்றி இயக்கப்படும் பாடசாலைகளில் மாணவர்களுக்காக பயன்படுத்தப்படவேண்டிய தரஉள்ளீட்டு பணத்தில் இயந்திர கொள்வனவு செய்யவேண்டும் என வற்புறுத்துவது முறையற்ற நிதிப்பயன்பாடாகும். இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - குறித்த நிறுவனம் ஒன்றுடன் வலயக்கல்விப்பணிப்பாளரே ஒப்பந்தம் செய்து - இயந்திரங்களை கொள்வனவுசெய்துள்ளார் எனவும் இவற்றினை விற்றுத் தீர்க்கும் முகமாகவே அதிபர்களின் சம்பளங்களை நிறுத்தி அடாவடித்தனம் செய்வதாகவும் அறியமுடிகின்றது. இச் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாணக்கல்வியமைச்சு விரைவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment