Thursday, September 26, 2019

நாளை 27ம் திகதியும் போராட்டம் தொடரும்; ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு பொருத்தமான எவரும் சமூகமளிக்கவில்லை!


இன்று 26 ஆம் திகதி - கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக திரண்ட பல்லாயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் - லோட்டஸ் வீதியில் பேரணியாக வந்தபோது - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் - பொலிஸாரின் நீர்பாய்ச்சும் வாகனம் சகிதம் கலகமடக்கும் பொலிஸாரால் பேரணி இடைமறிக்கப்பட்டது.

பின்னர் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் உள்ளிட்ட ஐவர் ஜனாதிபதி செயலகத்துக்கு பேச்சுவார்த்தையென அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் - ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பாக பதில் வழங்கக்கூடிய எவரும் காணப்படவில்லை. இதனால் பதிலளிக்கக்கூடியவருடனேயே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பானவர் எவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதிருந்த நிலையில் -அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் - நாளை 27 ஆம் திகதியும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தவாறே தொடர்வர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

சில பாடசாலை அதிபர்களுக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் - அதனால் - ஆசிரியர்களை பாடசாலை வருமாறு அதிபர்கள் ஒரு சிலர் அழைப்பதாகவும் தகவல்கள் எமக்கு கிடைக்கின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் பயப்படதேவையில்லை. இத்தகைய அச்சுறுத்தல் அனைத்தையும் - ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு - இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பெடுக்கும் என மீண்டும் தெரிவிக்கின்றோம்.

27 ஆம் திகதி நாளையும் பணியை புறக்கணித்து - போராட்டத்தை இன்றுபோல் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment