Wednesday, September 11, 2019

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு


வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் - இன்று 11.09.2019 புதன் கிழமை மாலை 2.15 மணியளவில் சந்திப்பொன்று நடைபெற்றது.
கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

வடமாகாணத்தின் சில பாடசாலைகளில் நிகழும் அதிபர்களின் முறையற்றசெயற்பாடுகள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கு இருவார காலத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

பாடசாலைகளில் மாணவர் அனுமதிகளுக்காக - சில அதிபர்கள் முறைகேடாக பணம் அறவிடுவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர், மாணவர் அனுமதிக்காக பணம் பெற்றுக்கொண்ட சகல அதிபர்கள் தொடர்பாகவும் தான் விபரம் கோரியுள்ளதாகவும் - தெரிவித்தார்.

பாடசாலைகளில் அபிவிருத்திச் சங்க செயற்பாடுகளில் அதிபர் சிலரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியவேளை - குறித்த ஒரு பிரபல பாடசாலையில் 4 வருடங்களுக்கு மேல் நிர்வாகம் புதிப்பிக்கப்படாமல் இயங்குவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு துரிதமாக  விசாரணை நடவடிக்கைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு ஒருமாத காலத்துள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

போர்கால சூழலில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக - நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியர்களுக்கு - நீக்கப்பட்ட காலத்துக்குரிய சம்பள ஏற்றங்களை சாதகமாக பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை சங்கத்தால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் - இவை வழங்குவதற்குரிய நடைமுறைகளில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துக்கு சாதகமான காலப்பகுதியாக கணிப்பிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் - அவ்வாறு ஓய்வூதிய சலுகை பெறாத ஆசிரியர்களளின் விபரம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாகவும், தரம் 3 அதிபர்களை பொருத்தமான  பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது..

ஆசிரியர்களின் வழங்கப்படாத சம்பள நிலுவைகளை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் - பிற விடயங்கள் தொடர்பாகவும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த ஒரு கல்வி வலயத்தில் நடந்துள்ள இரண்டு முறையற்ற நியமனங்கள் தொடர்பாக - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்பில் - ஆக்கபூர்வமான சந்திப்புகளூடாக வடமாகாண கல்வி செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment