யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன். சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
இம்மாணவர்கள் கொலைசெய்யப்பட்ட பின்னணியில் - பொலிஸாரினால் - இம்மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக – பொலிஸாரால் எவ்விதமான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மறைக்கப்பட்டு - விபத்து என்னும் அடிப்படையிலேயே சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ விசாரணையிலேயே சூட்டுக்காயங்கள் இனங்காணப்பட்டன. இந்தச் சூழலிலேயே – பொலிஸாரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆயுதம் தொடர்பாகவும் - அவர்களுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் தொடர்பாகவும் தரவுகள் பேணப்படும் நிலையில் - பொலிலாரால் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டமையும், மறுநாள் காலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டமையும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பொலீஸார் இக்கொலைச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றது ஏன்?. அப்படியாயின் - கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளைப் போன்றே தற்போதைய நல்லாட்சி அரசிலும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லையா? அல்லது திட்டமிட்டு கொலைகள் நடத்தப்படுகின்றனவா?
அத்துடன் - பொலிஸார் மறித்த போதும் மாணவர்கள் நிற்காது சென்றமைக்கான எந்த கண்கண்ட சாட்சியங்களும் இல்லை. இது பொலிஸாரினாலேயே கூறப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக - மூடி மறைக்க முற்பட்ட பொலிஸாரின் இக்கருத்தை - கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கொலைக்கான உண்மைக் காரணங்கள் கண்டறியப்படவேண்டும்.
இது போன்ற பொலிஸாரின் செயற்பாடுகளால் -அப்பாவிகளின் குடும்பங்களைச் சீரழிப்பது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு மாணவர்களின் இறப்பும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது குடுப்பங்களுக்கும், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். மேலும் கொலை தொடர்பாக – பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதிகிடைக்கவும், இழப்பீடுகள் பெற்றுக்கொடுக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும். அத்துடன் - இதுபோன்ற பொலிஸாரின் நடவடிக்கைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment