Thursday, June 8, 2017

வடமாகாண சபையின் நீதியான ஆட்சி தத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.

வடமாகாண சபையின் அமைச்சுக்கள் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில் - அதனை மூவரடங்கிய விசாரணைக்குழுவை நியமித்து விசாரணைக்குட்படுத்திய வடமாகாண சபையினைப் பாராட்டுகின்றோம். தமது ஆட்சியில் ஊழலை முற்றாக ஒழித்து - ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி - நல்லாட்சி வேடம் அணிந்து ஆட்சி ஏறிய அரசாங்கமே - ஊழல்வாதிகளை காப்பாற்றும் வேளையில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பாக - ஊழல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு வந்தவேளை -அதனை விசாரணைக்குட்படுத்தி குற்றங்களை கண்டறிந்த வடமாகாணசபையின் முன்னுதாரணமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர்சங்கம் வரவேற்கின்றது. 
இவ்விடயம் சார்பாக - வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டமல்லாமல் - வடமாகாண கல்வியமைச்சின் பல முறைகேடுகள் எமது சங்கத்தாலும் பலதடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தபட்டு வந்துள்ளன.
அன்றும் இன்றும் வடமாகாண மக்கள் கல்விமேல் அக்கறை கொண்டவர்கள். கொடூரமான யுத்த சூழ்நிலைகளில் கூட வடக்கு மக்கள் கல்வியின் முக்கியத்தும் பேணிவந்துள்ளனர். வடக்கில் கல்வியின் பின்தங்கிய நிலைக்கு வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளே காரணம் என நாம் கூறிவந்த நிலையிலும் - தற்போது விசாரணையில் ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே - வடமாகாண கல்வியினை பாதுகாக்கும் நோக்கில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பான விசாரணை குழுவின் பரிந்துரையை வடமாகாணசபை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். இதுவே வடமாகாணசபையின் நீதியான ஆட்சித்தத்துவத்தை நிலைநாட்டும் செயற்பாடாக அமையும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


No comments:

Post a Comment