Sunday, April 9, 2017

யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி விவகாரம் - மனித உரிமை ஆணைக்குழு தலைமைச் செயலகத்தில் விசாரணை



கடந்த வருடமளவில் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையாகிய யா-சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையை அடுத்து – வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பரஸ்பரம் இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிய நிலையில் - குறித்த பாடசாலையின் அதிபர் பெற்றுக்கொண்ட பணத்துக்கு எவ்வித பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படாமை விசாரணைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து – அப்பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏறத்தாள இருபது பேர் இணைந்து – விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் - இல்லையேல் தம் அனைவருக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குமாறும் கோரியிருந்தனர். இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் - அப்போதைய உதவிச் செயலாளராக இருந்த திருமதி சுகந்தி தலைமையில் மீண்டும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு குறித்த அதிபர் தொடர்பாக பரிந்துரைத்த விடயங்களையும் வடமாகாண கலவியமைச்சின் செயலாளர் நடைமுறைத்தாதமையினால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் - தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக முறைப்பாட்டினை செய்திருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னரும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சார்பாக சமூகமளித்த பிரதிநிதிகள் - மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கூறிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாது கல்வியமைச்சின் செயலாளர் இழுத்தடித்து வந்தார். 
இந்த நிலையில் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - ஆறு மாதங்களுக்கு முன்னர் – தற்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் முறையிட்டிருந்தனர். இந்த முறைப்பாட்டை வடமாகாண கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து விசாரித்து – அதிபர் மேற்கொண்டிருந்த பண முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் - அதற்கு முன்னர் குறித்த பாடசாலை அதிபரை இடமாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார். 
ஆனால் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அதனையும் நடைமுறைப்படுத்தாதிருந்த நிலையில் - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் இருந்த – ஆசிரியர்களின் முறைப்பாடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமையகமான கொழும்புக்கு மாற்றப்பட்டது. இதற்கமைய - இம்மாதம் 18 ஆம் திகதி (18.04.2017) காலை 10.00 மணிக்கு - இல 165 கின்ஸி வீதி கொழும்பு -8 இல் அமைந்துள்ள தலைமைச் செயலகத்து விசாரணைக்கு வருமாறு – வடமாகாண கல்விச் செயலாளர் , வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்,  வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஒருவருட காலத்தின் பின்னர் - தற்போது பத்திரிகையூடாக சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் வடமாகாணக் கல்வியமைச்சால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments:

Post a Comment