Sunday, April 2, 2017

ஆசிரியர் பயிற்சி கலாசாலை அனுமதிக்கான நேர்முகத் தேர்வு திகதியை பிற்போடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை


மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் போன்றவற்றில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் - ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்காத நிலைகாணப்படுகின்றது. அங்குள்ள வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு விடுவிக்கப்பட்ட நிலையிலும், மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதற்கு ஆசிரியர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டப்படுகின்றது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கு செல்ல வேண்டியவர்களுள்  அநேகமாக – 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்களாகக் காணப்படுகின்றார்கள். இப்பயிற்சியை முடிப்பதன் மூலமே அவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவர்களை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அனுமதிக்காது போகுமிடத்து – அவர்களினை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தாமதமாகும். இதனால் - ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது அநீதியான செயற்பாடாகும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஆசிரியர் பயிற்சிக் காலாசாலையில் பெறும் பயிற்சியின் மூலம் - எதிர்காலத்தில் மாணவர்களே நன்மையடைவர்.

இந்த நிலையில் - கடந்த 31.03.2017 வெள்ளிக்கிழமை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் - ஆசிரியர் கலாசாலைக்கு விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாணத்தின் செயலாளர் செந்தில் சிவஞானம் கருத்து தெரிவிக்கையில் -  எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை 02.04.2017 மத்திய மாகாணம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஆசிரியர்களை விடுவித்து கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதே நடைமுறையை ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறு - மூன்று மாகாணங்களும் ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவிக்காத நிலையினை கருத்தில்கொண்டு  - இவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கான திகதியைப் பிற்போடுமாறு மத்திய கல்வியமைச்சின் செயலாளரை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

No comments:

Post a Comment