Tuesday, July 31, 2018

நடமாடும் சேவையில் வடமாகாண கல்வியமைச்சரின் அடாவடி: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


வடமாகாணத்தின் கல்வி வலயங்களில் நடைபெறும் நடமாடும் சேவை - கல்வியமைச்சரின் அரசியலை வளர்ப்பதற்குரிய இடமாக மாறிவருவது கண்டனத்துக்குரியதாகும். நேற்றைய தினம் (31.07.2018) தீவக கல்விவலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் - பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் வகுப்புக்களை நடாத்த வலயக்கல்விப் பணிப்பாளர் அனுமதி தருவதில்லை என ஒரு அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது –  மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தான் தடைவிதிக்கவில்லை எனவும் - மேலதிக வகுப்புக்கள் நடாத்துவது தொடர்பாக தாபனவிதிகளின் அடிப்படையில் சில விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுவதுடன் மேலதிக வகுப்புக்களினை நடாத்தும் ஆசிரியர்களின் சம்மதக் கடிதங்களையும் வழங்கி அனுமதிபெற்று வகுப்புக்களை நடாத்தலாம் என கூறியுள்ளதாக, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியபோதும் - வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அதனை செவிமடுக்காது - தகாதவார்த்தைப் பிரயோகங்களால் பேசி வலயக் கல்விப் பணிப்பாளரை பல அதிபர்களின் முன்னால் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அங்குள்ள சில அதிபர்கள் கல்வியமைச்சரின் இச்செயற்பாடு தவறானது என சுட்டிக்காட்டியுமுள்ளனர். இத்தகைய கல்வியமைச்சரின் அடாவடியான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கமும் மிகவன்மையாகக் கண்டிக்கிறது.

வடமாகாணத்தின் கல்வியை தமது தனிப்பட்ட அரசியல் செய்வதற்குரிய களமாக எவரும் பயன்படுத்தமுடியாது. வடமாகாணத்தின் கல்வியமைச்சர் தகாதவார்த்தைப் பிரயோகங்களால் அதிகாரிகளை அச்சுறுத்தமுடியாது. ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்படும்போது – குற்றஞ்சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்தினையும் ஆராய்ந்துபார்த்தே முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு கருத்துக்களைக் கேட்க முடியாத கல்வியமைச்சர் – பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களை எடுப்பதற்குரிய தாபன விடயங்களையாவது அறிந்திருக்கவேண்டும்.

இவ்வாறு – கல்வியமைச்சர் எனும் தோரணையுடன் - அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சர் உடனடியாக நிறுத்தவேண்டும். தொடருமாயின் இவ்வாறாக அச்சுறுத்தி - அடிபணியவைக்கலாம் என்னும் அரசியல் அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



No comments:

Post a Comment